Published : 01 Jul 2025 05:04 AM
Last Updated : 01 Jul 2025 05:04 AM

காதல் மோக தொடர்புடைய போக்சோ வழக்குகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை கைது செய்ய கூடாது: ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: ​காதல் மோகத்​தின் பேரில் பதி​யப்​படும் போக்சோ வழக்​கு​களில் இரு​பாலரும் 18 வயதுக்கு உட்​பட்​ட​வர்​களாக இருந்தால் அவர்​களை கைது செய்து நீதி​மன்ற காவலுக்கு அனுப்​பக் கூடாது என்​றும், தேவையற்ற மருத்​துவ பரிசோதனை​களை மேற்​கொள்​ளக் கூடாது என்​றும் காவல்​ துறை மற்​றும் நீதித்​துறை அதி​காரி​களுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிதம்​பரத்​தில் பள்ளி மாணவி ஒரு​வருக்கு மாணவர் மஞ்​சள் கயிறு கட்​டிய சம்​பவம் மற்​றும் தரு​மபுரி​யில் நடை​பெற்ற இளம்​வயது திரு​மணம் போன்ற காதல் மோக வழக்​கு​களில் 18 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர், சிறுமியர் போலீ​ஸா​ரால் நடத்​தப்​பட்ட விதம் குறித்து ஏற்​கெனவே கண்​டனம் தெரி​வித்த உயர் நீதி​மன்​றம், சிறார் மீதான போக்சோ வழக்​கு​களை கையாளுவதற்​கான நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க நீதிப​தி​கள் என்​.ஆனந்த் வெங்​கடேஷ், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்வை அமைத்து உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் இந்த வழக்​கு​கள் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், இதுதொடர்​பான நிலை அறிக்​கையை தாக்​கல் செய்​தார். மேலும் அவர் கூறியது: 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறார்​களுக்கு இடையி​லான காதல் மோகத்​தால் ஏற்​படும் பாலியல் குற்​றங்​கள் தொடர்​பான வழக்குகளில் சிறு​வர்​களை கைது செய்து நீதி​மன்ற காவலுக்கு உட்​படுத்​தாமல், அவர்​களை சிறார் நீதி வாரி​யத்​தில் ஆஜர்​படுத்த வேண்​டும்.

இரு​விரல் அல்​லது ஆண்மை பரிசோதனை மேற்​கொள்​ளக்​கூ​டாது. காயங்​கள் இல்​லை​யென்​றால் மருத்​துவ பரிசோதனை நடத்தக்கூடாது என உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில் டிஜிபி சுற்​றறிக்​கைகளை பிறப்​பித்​தா​லும், இதுதொடர்​பான சரி​யான புரிதல் மற்​றும் விழிப்​புணர்வு நீதித்​துறை மற்​றும் காவல்​துறை அதி​காரி​களுக்கு இன்​னும் ஏற்​படவில்லை. இவ்​வாறு தெரி​வித்​தார்.

மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் தீபிகா முரளி, ‘‘போக்சோ வழக்​கு​களில் சிறு​வர்​களை கைது செய்து நீதி​மன்ற காவலுக்கு அனுப்​புவதும், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மருத்​துவ பரிசோதனை மேற்​கொள்​வதும் இன்​னும் தொடர்​கிறது. சுமார் 600 வழக்​கு​கள் இருதரப்​பிலும் சுமூக​மாக பேசி தீர்க்​கக்​கூடிய​வையே’’ என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘காதல் மோகத்​தால் எழும் குற்​றங்​களுக்​காக பதி​யப்​படும் போக்சோ வழக்​கு​களில் இரு​பாலரும் 18 வயதுக்கு உட்​பட்​ட​வர்​களாக இருந்​தால் அவர்​களை கைது செய்து நீதி​மன்ற காவலுக்கு அனுப்​பக்​கூ​டாது. இரு​விரல், ஆண்மை பரிசோதனை உள்​ளிட்ட மருத்​துவ பரிசோதனை கூடாது. இதுதொடர்​பான வழி​காட்டி நெறி​முறை​களை காவல், நீதித்​துறை அதி​காரி​களும் மருத்​து​வர்​களும் கண்​டிப்​பாக பின்​பற்ற வேண்​டும். மீறும் அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என எச்​சரித்​தனர்.

பின்​னர், ஏற்​கெனவே மைனர் சிறார்​கள் மீதான பல போக்சோ வழக்​கு​கள் சுமூக​மாக பேசி முடித்து வைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தமிழகம் முழு​வதும் நிலு​வை​யில் உள்ள 600 வழக்​கு​களின் தற்​போதைய நிலை குறித்​தும், பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களின் மனநிலை குறித்​தும் அரசு தரப்​பில் 8 வார காலத்​தில்​ அறிக்​கை தாக்​கல்​ உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x