Published : 30 Jun 2025 02:12 PM
Last Updated : 30 Jun 2025 02:12 PM

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? - மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மவுனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சொத்து வரியைக் குறைத்து முறைகேடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்களில் நீண்ட காலம் வருவாய்ப் பிரிவு கணினி தொழில்நுட்பங்களைக் கையாண்ட முக்கிய ஊழியர் ஒருவரையும், மண்டலத் தலைவர்கள் சிலரையும் போலீஸார் விசாரணைக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், மண்டலத் தலைவர்களை விசாரணைக்கு அழைக்க விடாமல் மாநகர் ஆளும் கட்சி முக்கியப் புள்ளி, போலீஸாருக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜரானால் தங்கள் எதிர்கால அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என சில மண்டலத் தலைவர்கள் அந்த முக்கியப் புள்ளியிடம் முறையிட்டுள்ளனர். தற்போது அந்த மாநகர் ஆளும்கட்சி அதிகாரப் புள்ளி வழிகாட்டுதலில்தான், மண்டலத் தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் பலர் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் மாவட்டச்செயலாளர் மா.கணேசன் வெளியிட்ட அறிக்கையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என யாராக இருந்தாலும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கூட்டணிக் கட்சியே நேரடியாக அறிக்கை விட்டது மாநகர் திமுகவுக்கும், அதன் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதன் மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக அழுத்தமாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தாமல் மவுனம் காப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மாநகராட்சி வரி குறைப்பு முறைகேட்டை 2024-ம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமாரிடமே மனுக் கொடுத்து முதலில் எதிர்ப்பைப் பதிவு செய்தது அதிமுகதான். அதன் அடிப்படையில்தான் அவரே, கடந்த ஆண்டு சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.

தற்போது, மாநகராட்சி முறைகேடு விவகாரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி வருகிறோம். இதுதொடர்பாக மாநகர் அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் 15 கவுன்சிலர்கள், நிர்வாகிகள் ஒன்று திரண்டு புகார் மனு கொடுக்க மாநகராட்சி ஆணையரை வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

வெளிப்படையான விசாரணைக்கும், முறைகேட்டில் தொடர்புடைய மண்டலத் தலைவர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க செல்லூர் கே. ராஜூ திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x