Published : 30 Jun 2025 12:15 AM
Last Updated : 30 Jun 2025 12:15 AM
திருப்புவனம்: நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் அஜித்குமார் (27). திருமணமாகாத இவர், அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்பவரது நகைகள் திருடுபோய்விட்டன. இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமார் உள்ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பின்னர், அஜித்குமாரை நேற்று முன்தினம் விடுவித்தனர். வெளியே வந்த அவரை மீண்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அஜித்குமாரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக அஜித்குமாரின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், மானாமதுரை உட்கோட்ட தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். மேலும், சம்பவம் தொடர்பாக திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் நேற்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அஜித்குமாரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்குமாரை கொன்ற காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது, அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை திமுக பிரமுகர் ஒருவரது காரில் ஏற்றி, உடலை வாங்குவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையிலான கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், அஜித்குமாரின் தாயார், சகோதரரை காவல் துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அஜித்குமார் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைவர்கள் கண்டனம்: மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய முதல்வர் கண்டும் காணாமல் இருப்பதால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மடப்புரம் சம்பவத்துக்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஒருவர் தவறு செய்ததாக காவல் துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைக்கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி, உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கு வருவோரின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. காவல் துறையின் அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: சாத்தான்குளம் படுகொலைபோல, மடப்புரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக காவல் துறையும், முதல்வரும் தலைகுனிய வேண்டும். இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: பாலியல் குற்றங்களில் ஈடுபடும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும்
திமுகவினர் யாரும் காவல் துறையால் தாக்கப்படுவதில்லை. சிறிய குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல் துறை கடுமையாகத் தாக்குவது அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டிலிருந்து 23 பேர் காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்துள்ளனர். ஆனால், முதல்வர் எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT