Published : 29 Jun 2025 05:57 PM
Last Updated : 29 Jun 2025 05:57 PM
கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேல்மலைப் பகுதியான கொடைக்கானல் - பூம்பாறை இடையே 21 கி.மீ., சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த இருதினங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மருத்துவமனை, ஆரம்பர சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பழநி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ., க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மேல்மலைப்பகுதி மலைகிராமமான பூம்பாறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள சென்றவர் திடீரென காரில் இருந்து இறங்கி ஏற்றம் இறக்கம் மிகுந்த மலைச்சாலையில் நடக்க துவங்கினார். பூம்பாறை மலைகிராமம் வரை 21 கி.மீ., நடந்தே சென்றார்.
பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை மருந்துகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். பதிவேட்டில் இருந்த சிகிச்சை பெற்று திரும்பிய நோயாளிகளின் அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முறையாக சிகிச்சயளிக்கப்பட்டதா என கேட்டறிந்தார். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் செயல்பாட்டை பாராட்டும் வகையில் டீ வாங்கி வரச்சொல்லி அவர்களுக்கு தானே வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் இருதய நோய்க்கு உடனடியாக சீர் செய்வதற்கு லோடிங் டோசஸ் என்று சொல்லக்கூடிய மருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்களிலும், 2,286 சுகாதார நிலையங்களிலும் 3 மருந்துகள் அடங்கிய 16 மாத்திரைகள் தொகுப்பு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பூம்பாறை கிராமத்தில் 23 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற சுகாதார நிலையத்திலும் 2286 கட்டமைப்புகளில் நாய்க்கடி மற்றும் பாம்புக்கடிக்கான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT