Published : 29 Jun 2025 12:35 AM
Last Updated : 29 Jun 2025 12:35 AM

தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில்அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x