Published : 28 Jun 2025 02:27 PM
Last Updated : 28 Jun 2025 02:27 PM
திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20 சதவீதம் ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாஜகவில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. வேண்டாம் திமுக; இனியும் வேண்டாம் என்பதுதான் எங்களது கோஷம். எங்கள் கூட்டணி குறித்து மட்டுமே ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
எங்களைச் சுற்றி சுற்றி வந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி கேட்பீர்களா? விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு எத்தனை சீட் தருவீர்கள் என்று முதல்வரிடம் கேட்பீர்களா?. எனவே எங்கள் கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் .தேர்தல் வரும்போது கேளுங்கள். மாறுதல் வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். கூட்டணியில் இருப்பவர்களிடமும் மாறுதல் வேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
செல்வப் பெருந்தகை டாக்டர் ராமதாஸை சந்தித்தது குறித்து ஊகத்தின் அடிப்படையில் எதையும் சொல்வதற்கில்லை. அரசியல் இல்லாமல் யாரையும் பார்க்க வேண்டியதில்லை. பின்னர் அது அரசியலாகவும் மாறும். தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் பட்டியல் கட்சி தலைமையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் பட்டியல் வெளியாகும்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20 சதவீதம் ஆசிரியர்கள் இல்லை என்பதை ஏற்கெனவே நாங்கள் கூறியிருந்தோம். அப்படியானால் மற்ற பள்ளிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் தினமும் பாலியல் குற்றங்களும், போதைப் பொருள் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படியானால் இது ஆன்மிக ஆட்சியா?" இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT