Published : 28 Jun 2025 02:14 PM
Last Updated : 28 Jun 2025 02:14 PM

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது.

அதை பிரித்துப் பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அதில் ஒரு சிறிய குரங்கு இருந்தது. அதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர் நேரில் வந்து சோதித்த போது, அது அமேசான் காடுகளில் வசிக்கும் அரிய வகை அணில் குரங்கு என்பது தெரிய வந்தது.

ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உயரம் வளரும் இக்குரங்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், வன உயிரியல் சட்டத்தின்படி இந்தியாவை தவிர்த்த மற்ற நாடுகளின் உயிரினங்களை இங்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றம். இந்திய சுற்றுச்சூழலுக்கு தொடர்பில்லாத இதுபோன்ற உயிரினங்கள் இந்தியாவின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை.

எனவே அந்த குரங்கை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, குரங்கை கடத்தி வந்த கண்ணன் என்ற பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலைய பயணியிடம் குட்டி குரங்கு ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x