Published : 27 Jun 2025 05:21 PM
Last Updated : 27 Jun 2025 05:21 PM

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் உத்தரவு எப்போது? - தேர்தல் ஆணையம் தெரிவிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்தது உள்பட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது, என்ற கோரிக்கைகளுடன் அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது, என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா? என ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகாரவரம்பு குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனக்கூறி, இந்த ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. இது தேவையில்லாத தவறான தகவல்களை பரப்ப வழி வகுக்கும்.தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயன், “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அதுதொடர்பாக, எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x