Published : 27 Jun 2025 08:33 AM
Last Updated : 27 Jun 2025 08:33 AM
“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இப்படி பேசியதை வைத்து நாமக்கல் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் வரும் 6 தொகுதிகளையும் வென்றெடுக்கும் பொறுப்பில் இருக்கும் செந்தில்பாலாஜி, மேற்கு மாவட்டத்துக்கு மட்டும் தனி கவனம் செலுத்தப் போவதாகச் சொன்னதன் பின்னணியில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி இருக்கிறார் என்று ஒரு தரப்பும், மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தியை இம்முறை தெறிக்கவிட வேண்டும் என்பதற்காகத்தான் செந்தில்பாலாஜி அப்படிப் பேசினார் என்று ஒருதரப்பும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வினர் சிலர், “மேற்கு மாவட்டச் செயலாளரான மூர்த்தி 2016-ல் பரமத்தி வேலூர் தொகுதியில் நின்று வென்றார். அப்போது மாவட்டத்தின் ஒரே திமுக எம்எல்ஏ அவர் மட்டும் தான். அதை வாய்ப்பாக பயன்படுத்தி அதிமுக அமைச்சர் தங்கமணியுடன் நட்பு பாராட்டினார். இருந்த போதும் 2021-லும் அவருக்கு தலைமை சீட் கொடுத்தது. ஆனால், இம்முறை அவரால் வெல்லமுடியவில்லை. மேற்கு மாவட்டத்தில் வரும் குமாரபாளையத்தில் தங்கமணி மீண்டும் வெற்றிபெற்றார். திருச்செங்கோட்டில் மட்டும் திமுக கூட்டணி கட்சியான கொமதேக நூலிழையில் வெற்றிபெற்றது.
தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து திமுக தலைமை விசாரணை நடத்திய போது, குமாரபாளையத்தில் போட்டியிட்ட வெங்கடாசலம், மூர்த்திக்கு எதிராக ஸ்டாலினிடம் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த நிலையில், அடுத்ததாக வந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 3 நகராட்சிகளிலும் திமுக வேட்பாளரை மூர்த்தியால் சேர்மனாக கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து மூர்த்தியை தூக்கிவிட்டு, இளைஞரணியைச் சேர்ந்த மதுரா செந்திலை மாவட்டச் செயலாளராக்கியது தலைமை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மதுரா செந்திலை தூக்கிவிட்டு மீண்டும் மூர்த்தியையே மேற்கு மாவட்டச் செயலாளராக தலைமை நியமித்தது. இப்படியாக மேற்கு மாவட்டத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுவதைக் கவனத்தில் கொண்டும், மூர்த்தியின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் வைத்தும் செந்தில்பாலாஜி அப்படி பேசி இருக்கலாம்.
அதேசமயம் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தொடர்ந்து 4-வது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கிறார். அவரது குமாரபாளையம், ஏற்கெனவே வென்ற திருச்செங்கோடு தொகுதிகள் மேற்கு மாவட்டத்தில் வருகின்றன. அதனால், இம்முறை தங்கமணியையும் தோற்கடித்துக் காட்டுவேன் என்ற எண்ணத்திலும் செந்தில்பாலாஜி அப்படி பேசி இருக்கலாம்” என்று சொன்னார்கள்.
இதுகுறித்து மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தியிடம் கேட்டதற்கு, “மேற்கு மண்டலத்தில் வரும் 35 தொகுதிகளுக்கும் செந்தில்பாலாஜி பொறுப்பாளர். அப்படியிருக்க, இங்கு மட்டும் தனி கவனம் செலுத்தமுடியுமா என்ன? கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அப்படி பேசி இருக்கலாம். என் மீது அவருக்கு பிரியம் அதிகம். அதனால் கூட அப்படி பேசி இருக்கலாம்” என்றார்.
கடந்த முறை, நீங்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் நட்பு பாராட்டியதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதனால் அதை மனதில் வைத்தும் செந்தில்பாலாஜி அப்படி பேசி இருக்கலாம் என்கிறார்களே என்று கேட்டதற்கு, “அதிமுக-வினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கூட நான் செல்வதில்லை. சிறு வயது முதலே கலைஞர் எனக்குள் ஊறிப்போனவர். அவரை பிடித்ததால் தான் கட்சிக்கு வந்தேன். 40 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். தங்கமணியுடன் தொடர்பு வைக்கும் அளவுக்கு என் அம்மா எனக்கு பால் வார்க்கவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT