Published : 23 Jun 2025 08:25 AM
Last Updated : 23 Jun 2025 08:25 AM
தவெக தலைவர் நடிகர் விஜய் மாணவிகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரத்தில் தவெக-வினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் இடையில் வெடித்த மோதல் இன்னும் நின்றபாடில்லை. மேடை கண்ட இடமெங்கும் தவெக-வினருக்கு எதிராக தகித்துக் கொண்டிருக்கிறார் வேல்முருகன். பதிலுக்கு தவெக தம்பிகளும் சமூகவலைதளங்களில் அவரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக வேல்முருகனிடம் பேசினோம்.
உங்களுடைய தாய்க் கட்சியான பாமக-வில் நடக்கும் தந்தை - மகன் மோதலுக்கு உண்மையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
உண்மையான காரணம் உங்களுக்கோ, எனக்கோ, யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அது அப்பா, மகன் இருவருக்கு மட்டுமே தெரிந்த விடயம்.
பாமக-வில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு பணம் தான் பிரதான காரணம் என்கிறார்களே..?
அது அவர்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரிந்தது என்பதும் ஊரறிந்த ஒன்று.
உங்களை மீண்டும் பாமக-வில் இணைத்து கட்சியை பலப்படுத்த ராமதாஸ் முயற்சித்ததாகவும் அதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டதாகவும் சொல்கிறார்களே..?
அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் சொல்கிறாரே?
ஒவ்வொரு கட்சியும் ஏற்கெனவே பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் கூடுதலாகக் கேட்பது இயல்பானது. அப்போது தான் கட்சிகள் வளர முடியும். அதன் மூலம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கமுடியும் என்ற அடிப்படையில் பிரதானக் கட்சிகளிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்பது ஏற்கெனவே உள்ள வழக்கம் தான்.
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக குறைக்காது என செல்வப்பெருந்தகை சொல்லி இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது திமுக மீதான செல்வப்பெருந்தகையின் மிகப்பெரிய நம்பிக்கையைக் காட்டுகிறது.
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் திடீரென திருமாவளவனை சந்தித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஓட்டல்களிலோ, விடுதிகளிலோ அரசியல் கட்சித் தலைவர்கள் அருகருகே உள்ள அறைகளில் தங்கும் போது, மாற்றுக் கட்சித் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுவது தமிழக அரசியல் வரலாற்றில் காலங்காலமாக உள்ள வழக்கம் தான். அந்தவகையில் திருமாவளவன் - வைகைச்செல்வனின் இயல்பான சந்திப்பை வைத்து திமுக கூட்டணியில் இருந்து திருமா வெளியேறுகிறார் என்று பேசுவது நியாயமில்லை. அதற்கு அவரே மறுப்பும் தெரிவித்திருக்கிறார். திருமாவளவனின் அந்தக் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்திருப்பதாக வைகைச்செல்வன் சொல்கிறாரே?
அது அவரது ஆசை. ஓட்டை விழவேண்டும் என்பது அதிமுக-வின் எதிர்பார்ப்பு. கோட்டையைப் பிடிக்க வைகைச்செல்வன் கண்ணுக்குத் தெரிந்த ஓட்டை வழி எங்கள் கண்களுக்குத் தெரியவில்லையே.
கூட்டணியில் பாஜக இருப்பதால் தான் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்குப் போக யோசிக்கிறார் என்பதை ஏற்கிறீர்களா?
இதை திருமாவளவனிடம் தான் கேட்கவேண்டும்.
இத்தனை நாளும் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்துவிட்டு, இப்போது அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றெல்லாம் ஆளும்கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்குவது அரசியல் ஆதாயத்துக்காகத்தானே..?
வேல்முருகன் எந்த ஆதாயத்தையும் எதிர்நோக்கி அரசியல் செய்வது கிடையாது. கலைக்கல்லூரி, சாலை வசதி என தொகுதி மக்களின் தேவையறிந்து அதற்கேற்ற வகையில் சட்டமன்றத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுக் கொடுப்பது தான் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் செய்யும் கடமை. அதைத் தான் செய்து வருகிறேன்.
திராவிடக் கட்சிகளால் தமிழகம் பயனடைந்திருப்பதை மறுக்க முடியாது என நீங்கள் பேசி இருக்கிறீர்களே..?
ஆம், திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் மருத்துவக் கல்லூரி, கலைக் கல்லூரி, சாலைகள், மேம்பாலங்கள் என தமிழகத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தான் நான் பேசியிருக்கிறேன்.
2026-ல், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் எனச் சொல்லி இருக்கிறாரே அன்புமணி?
ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி தொடர்பாக இப்படி பேசுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், அவர்கள் சொன்னபடி நடந்திருக்கிறதா என்பதைத் தான் ஆய்வுசெய்ய வேண்டும்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அருகில் நின்று தவெக தலைவர் நடிகர் விஜய் படமெடுத்துக் கொண்டதை இத்தனை பூதாகரமாக்க வேண்டுமா?
பூதாகரமாக்கியவர்களிடமே அதை விட்டுவிடுகிறேன்.
நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை விமர்சனம் செய்திருக்கிறதே தவெக?
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்ட ஃபார்வர்டு பிளாக் கட்சி தொடங்கி தொல்.திருமாவளவன் மற்றும் நான் உள்ளிட்ட பலரும் தனியாக அரசியல் கட்சிகளை தொடங்கி, தனிச்சின்னம் கிடைக்காத போது, பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டு, சட்டமன்றம் மற்றும் மக்களவைக்குச் சென்று மக்கள் பணி ஆற்றியுள்ளோம். அதன்படி சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்பதற்காக எனது முன்னோர்கள் பின்பற்றிய வழியைத் தான் நான் பின்பற்றியுள்ளேன். இதில் எந்தத் தவறும் இல்லை. என்னைவிட பெரிய கட்சிகள் எல்லாம்கூட இந்த வழிமுறையை பின்பற்றியுள்ளனர்.
ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் உறுப்பினராகி அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சரி என நினைக்கிறீர்களா?
இதற்கான பதிலை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்
.
இந்த முறையும் உதயசூரியனில் தான் போட்டியிட வேண்டும் என திமுக சொன்னால் என்ன செய்வீர்கள்?
சொல்லட்டும்... அப்புறம் பார்க்கலாம்.
விஜய்யை மேடைகளில் தாக்குவதற்கு திமுக உங்களை ஆயுதமாக பயன்படுத்துவதாக சொல்கிறார்களே?
திமுக அல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் என்னை ஆயுதமாக பயன்படுத்த முடியாது. நான் தமிழ்த் தேசிய தளத்தில் வளர்ந்து வருபவன். என்னை எவராலும் வளைக்க முடியாது. பிறரது எண்ணங்களை பேசுகின்ற ஆளாகவும் என்னை மாற்ற முடியாது.
ஆட்சிக்கு எதிரான அதிருப்திகள் இருப்பதால் இம்முறை திமுக-வுக்கு தேர்தல் களம் அத்தனை சுலபமாக இருக்காது என்று சொல்வதை ஏற்கிறீர்களா?
அப்படியில்லை... தமிழகத்தில் நான்குமுனை போட்டி ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. அப்படி நான்கு அணிகளாக போட்டியிடுகிறபோது, திமுக தலைமையிலான கூட்டணி வலுவான மதச்சார்பற்ற மக்கள் கூட்டணி என்பதால், இக்கூட்டணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தத் தேர்தலிலும் தோற்றுப் போனால் அதிமுக-வுக்கும் பழனிசாமிக்கும் எதிர்காலம் இல்லை என்கிறார்களே..?
அப்படிக் கூறமுடியாது. அலெக்சாண்டர் 17 முறை படையெடுத்து தோல்வி கண்டு, பின்னர் வென்ற வரலாற்றை நாம் படித்திருக்கிறோம். ஓரிரு தேர்தல்களில் தோற்பதால் அந்தக் கட்சி மீண்டும் எழாது எனக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. நேர்மையாக உழைத்து மக்கள் பணியாற்றினால் மக்கள் அதற்குரிய அங்கீகாரத்தை வழங்குவர். இது அதிமுக-வுக்கு மட்டுமல்ல. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். 14 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த வரலாறை மறந்துவிடக் கூடாது.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கே ஆத்ம திருப்தியுடன் இருப்பதாக உங்களால் சொல்லமுடியுமா?
மக்களுக்கான பிரச்சினைகளில், ஆளும்கட்சியுடன் கூட்டணிக் கட்சிகளுக்கு சில கோபதாபங்கள் இருக்கத் தான் செய்யும். எனக்கு, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தவில்லை என்ற கோபமுண்டு. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் இயற்றவில்லை என்ற கோபமிருக்கிறது. ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்ற கோபமிருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்களின் இருப்பிடத்தை இடித்து, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களிடம் அளித்திருப்பதிலும் மாற்றுக் கருத்து உண்டு. இதேபோன்று திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையும், அர்ச்சனையையும் தமிழில் தான் நடத்தவேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன். ஆனால் எனது கோரிக்கைக்கு மாறாக, தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்பில் எனக்கு உடன்பாடில்லை.
எனவே, ஆளும் கட்சியுடன், கூட்டணிக் கட்சிகளுக்கு மாற்றுக் கருத்து இருக்கத் தான் செய்யும். ஆனால் அதேசமயம், பாஜக என்ற மக்கள் விரோத கட்சி தமிழகத்தில் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடக் கூடாது என்ற ஒற்றைப் புள்ளியில், மனக்கசப்பை மறந்து, மதச்சார்பற்ற மக்களுக்காக நாங்கள் இந்த கூட்டணி தொடரவேண்டும் என விரும்புகிறோம். எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு மன நிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காக இணைந்து செயல்படுகிறோம்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்கிறார் அமித் ஷா. ஆனால், கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை என்கிறாரே இபிஎஸ்?
அவ்விரு கட்சிகளுக்கு இடையிலான குடுமிபிடி சண்டை தேர்தல் நெருக்கத்தில் மாறலாம்.
கூட்டணி ஆட்சி விவகாரத்தை வைத்தே தேர்தல் நெருக்கத்தில் பாஜக அணியைவிட்டு வெளியேறி தவெக-வுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்கிறார்களே..?
இப்போது அதுகுறித்து உறுதியாக, இறுதியாக எதையும் கூறமுடியாது.
அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் இபிஎஸ் நிச்சயம் முதலமைச்சர் என்கிறார்களே அரசியல் நோக்கர்கள்?
பல அரசியல் நோக்கர்களின் கருத்துகளும், கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப் போயிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் வாக்களித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஒருவேளை, திமுக-வுடனான கூட்டணி முறிந்து போனால் தவாக-வின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?
தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது மக்களுக்கானது. எங்களது தேர்தல் அரசியல் பங்களிப்பு என்பது 10 சதவீதமே. சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதும், சாமானிய மக்களுக்கு ஏதிரான ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடி நியாயம் பெற்றுத் தருவதும் தான் எங்கள் கொள்கை. அதனால் நாங்கள் தேர்தல் அரசியல் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தேர்தல் காலத்தில் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்போம். அதுவரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போம். தேர்தல் அரசியலில் வாய்ப்புக் கிடைத்தால் சட்டப்பேரவையில் எடுத்துரைப்போம்.
முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி பாஜக அணிக்கு ஆதரவு திரட்டுவதை வேல்முருகனாக எப்படி பார்க்கிறீர்கள்?
இத்தனை ஆண்டுகள் இல்லாத விதமாக இப்போது முருகனை வழிபடுவதன் மூலம் கோடிக்கணக்கான முருக பக்தர்களை தன் பக்கம் இழுப்பதற்கான அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறது பாஜக. இது ஏற்புடையதல்ல.
ஒரு சில அதிகாரிகள் இந்த அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டு இன்னும் அப்படியே இருக்கிறதா?
அப்படியே தான் உள்ளது. பல அதிகாரிகள் தன்னாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் முன்பு சொன்னது போல ஓர் அதிகாரி கைதும் செய்யப்பட்டிருக்கிறாரே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT