Published : 22 Jun 2025 10:32 AM
Last Updated : 22 Jun 2025 10:32 AM
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், வேளச்சேரி மேம்பால ரயில் வழித் தடம் இணைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை இடையே நாள்தோறும் 100 மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது. வேளச்சேரியையும், பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ல் தொடங்கப்பட்டன. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பெரிய, பெரிய கட்டிடங்களாக வணிக நோக்கத்தோடு அமைக்கப்பட்டன.
ஆனால், ரயில்வே துறை நிர்ணயிக்கும் வாடகை கட்டணம் அல்லது ஒப்பந்தம் எடுக்க அதிக கட்டணமாக கொடுக்க நிறுவனங்கள், வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால், வேளச்சேரி மேம்பால வழித் தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி மேம்பால ரயில் பாதையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவை, ரயில்வே துறை ஏற்றுக் கொண்டுள்ளது. வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு, வருவாய் பங்கீடு உள்ளிட்டவை குறித்து தெற்கு ரயில்வே அளித்த அறிக்கையை, வாரியம் ஆய்வு செய்து வருகிறது.
இதுதொடர்பாக, தமிழக அரசும், மத்திய அரசுக்கு அண்மையில் வலியுறுத்தி கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், வேளச்சேரி மேம்பால ரயில் தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப் பதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT