Published : 22 Jun 2025 01:34 AM
Last Updated : 22 Jun 2025 01:34 AM
கேலி சித்திரம் மூலம் அவதூறு பரப்பும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கீழடி அகழாய்வு குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எனது தலைமையிலான அதிமுக அரசு, கீழடி அகழாய்வுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை முழுமையாக தெரிவித்துவிட்டோம். விரும்பும் தெய்வங்களை வழிபடுவது நமது உரிமை.
அந்த அடிப்படையில், இந்து முன்னணிசார்பில் மதுரையில் முருக பக்த மாநாடு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் பேசுவோர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரின் கருத்தை தெரிவித்துள்ளார். தாய்மொழி முக்கியம் என்று கூறியுள்ளார். தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தைவிட ஆங்கிலத்துக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அவர் கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதை மடைமாற்றம் செய்வதற்காக கேலி சித்திரம் மூலம் அவதூறு கருத்துக்களைப் பரப்புகின்றனர். 2026 தேர்தலில் நிச்சயம் இதற்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT