Published : 21 Jun 2025 05:07 PM
Last Updated : 21 Jun 2025 05:07 PM
சென்னை: “பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்” என என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பாஜக ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பாஜக செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடியின் மிக நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் குவித்த சொத்துக்கள் பலமடங்கு பெருகியதை சர்வதேச புகழ் பெற்ற ‘எக்னாமிஸ்ட்” இதழ் மற்றும் ‘ஆக்ஸ்பார்ம்” பலமுறை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவை வளம் கொழிக்கும் நாடாக பிரதமர் மோடி மாற்றினாரோ இல்லையோ, அதானியை உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதன்மையிடத்தை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார். கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகிற சலுகைகளுக்கு ஆதாயமாக தேர்தல் பத்திர நன்கொடைகள் மூலம் பாஜக நிதியை பெருக்கிக் கொண்டு தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
2019, 2024 மக்களவை தேர்தல்களில் பெரும் நிதி வசதிகளோடு பாஜக தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அத்தகைய வாய்ப்பு மறுக்கப்பட்டது. தேர்தல் களம் சமநிலையற்ற தன்மை கொண்டதாக இருந்தது. 2024 மக்களவை தேர்தலில் 32 அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவழித்தது என்கிற தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று வெளியிட்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் செலவிட்ட மொத்த தொகை ரூபாய் 3352 கோடி. இதில் பாஜக மட்டும் செலவழித்த தொகை ரூபாய் 1494 கோடி. இது மொத்த கட்சிகளின் தேர்தல் செலவினங்களில் 44.56 சதவிகிதமாகும்.
இத்தகைய பெரும் நிதி வசதியோடு தான் கடந்த மக்களவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. இது தேர்தல் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடியே தேர்வு செய்வதால் அது பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆதரவோடு செய்வதால் தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது.
தேர்தல்களின் போது எடுக்கப்படுகின்ற சி.சி.டி.வி. காட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை 45 நாட்களுக்குப் பிறகு அழித்து விடலாம் என்று முடிவு செய்திருப்பது நேர்மையான தேர்தல் நடைபெறுவதை பாதிக்கக் கூடிய செயலாகும். தேர்தல் சம்பந்தமான முறைகேடுகள் குறித்து சில நாட்களுக்கு பிறகு, பல்வேறு வழக்குகளில் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் போது அவற்றை வழங்காமல் தடுப்பதற்கு இந்த முடிவு வழிவகுத்திருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதை குழிதோண்டிப் புதைப்பதை நோக்கமாகக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிற இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது, ‘நம்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்” என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சின் மூலம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் ஆட்சி மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும் என்பதற்கு மாறாக, அமித் ஷா பேசியிருக்கிறார்.
பண்டித நேரு 1961-இல் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று உறுதிமொழி வழங்கினார். தொடர்ந்து பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றவர்களால் நேருவின் உறுதிமொழிக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்க ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த திருத்தத்தின்படி, இந்தியாவின் நிரந்தர ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.
காங்கிரஸ் பிரதமர்கள் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை தகர்க்கின்ற வகையில் அமித்ஷா பேசியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருந்தாலும் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தியில் பேசுவதையே பிடிவாதமாக கையாண்டு வருகிறார்கள். மக்களுக்கு புரிகிற ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். பண்டித நேரு உள்ளிட்ட காங்கிரஸ் பிரதமர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருகிற போது அந்த மக்களுக்கு புரிகிற வகையில் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.
ஆனால், அத்தகைய நடைமுறையை உதாசீனப்படுத்துகிற வகையில் தான் பாஜகவினர் செயல்பட்டு வருகிறார்கள். அமித் ஷாவின் ஆணவப் பேச்சுக்கு தலைவர் ராகுல் காந்தி கடுமையான பதிலடி கொடுத்திருப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆங்கிலத்தை பயில்வதன் மூலம் உலகத்துடன் போட்டி போடக்கூடிய ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடியது என கூறியிருப்பதன் மூலம், இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை ராகுல்காந்தி முற்றிலும் உணர்ந்திருப்பதையே இது காட்டுகிறது.
எனவே, தொடர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமான தேர்தல் நடைமுறை, மொழிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிற பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடுகள் நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT