Published : 21 Jun 2025 09:53 AM
Last Updated : 21 Jun 2025 09:53 AM
“நான் உயிரோடு இருக்கும் வரை பாமக-வுக்கு தலைவர் நான் தான்” என்று திடமாகச் சொல்கிறார் மருத்துவர் ராமதாஸ். பதிலுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அய்யா அவர்களுக்கு சுகர், பிபீ எல்லாம் இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளோடும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும். என் மீது ஏதாவது தவறு இருந்தால் அய்யா அவர்களே... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று டச்சிங்காக பேசி, ராமதாஸ் நிழலில் தேங்கி நிற்கும் சொச்ச நிர்வாகிகளையும் சொல்லாமல் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
இவர்களுக்கு மத்தியில் ஜி.கே.மணி போன்றவர்கள், “பாமக-வுக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சீக்கிரமே முடிவுக்கு வரும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் உக்ரமாகிக் கொண்டே வருவதால் கீழ்மட்ட நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். ஏதாவது ஒரு பக்கம் சாய்பவர்களை அப்பாவும் மகனும் மாறி மாறி பொறுப்புகளை விட்டு நீக்குவதும் சேர்ப்பதுமாக பரமபதம் ஆடிக் கொண்டிருப்பதே இவர்களின் குழப்பத்துக்குக் காரணம்.
கட்சிக்குள் இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கையில் திமுக அரசுக்கு எதிரான, தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை ஜூலை 25-ல் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் அன்புமணி. தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் இந்த 100 நாள் பயணத்துக்கு தனது விசுவாசிகளை தயார்படுத்தும் விதமாக, மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டங்களை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி.
எங்கு சுற்றியும் எதிர்காலத்தில் கட்சி இவர் கைக்குத்தானே வரப்போகிறது என்ற எண்ணத்தில், அன்புமணி கூட்டும் பொதுக்குழு கூட்டங்களில் திரளான நிர்வாகிகள் தில்லாக பங்கேற்று வருகிறார்கள். தமிழக மக்களுக்கான உரிமைப் மீட்புப் பயணம் என்பதை விட கட்சிக்குள் தனது உரிமையை மீட்பதற்கான பயணமாகவே இந்த 100 நாள் பயண ‘திட்டத்தை’ வடிவமைத்து வருகிறார் அன்புமணி.
அண்மையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டத்துக்காக வருகை தந்த அன்புமணிக்கு பாமக-வினர் உற்சாக வரவேற்பளித்து அவரை குஷிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான அனைத்துப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு அன்புமணிக்கு ஆரவார வரவேற்பு கொடுத்தனர். பதிலுக்கு அவரும் கட்சி நிர்வாகிகளிடம் வழக்கத்தை மீறிய கனிவுடன் பேசி வியப்பூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “பாமக-வுக்கு இது இக்கட்டான நேரம். அதேசமயம், தேர்தல் கூப்பிடு தொலைவில் இருக்கையில் இப்படி அப்பாவும் பிள்ளையும் நீயா நானா யுத்தம் நடத்துவது மற்ற கட்சிகளுக்கு இளக்காரமாகப் போய்விடும். பாமக எந்தப் பக்கம் சாயப் போகிறது என மற்ற கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய இந்த நேரத்தில், ‘முதலில் அப்பாவும் பிள்ளையும் சமாதானத்துக்கு வரட்டும்; அப்புறம் பார்க்கலாம்’ என்று பாமக-வை உதாசீனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர் அய்யா கூற்றுப்படியே பார்த்தாலும் அன்புமணி பாமக செயல்தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவர் பின்னால் செல்பவர்களையும், அவரது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களையும் கட்சி விரோதிகளாக நினைத்து அவர்களை பொறுப்புகளை விட்டு நீக்குகிறார் அய்யா. அவரால் இப்படி எத்தனை பேரை நீக்கமுடியும் என்று தெரியவில்லை.
ஆனாலும், அய்யா என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்று தான் அன்புமணி நிகழ்ச்சிகளில் பாமக நிர்வாகிகள் தைரியமாக பங்கேற்று வருகிறார்கள். இதை வைத்துப் பார்க்கையில், கட்சி அன்புமணி கையில் இருக்க வேண்டும் என்பதுதான் பாமக நிர்வாகிகள் பெரும்பகுதியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்றார்கள்.
இது தொடர்பாக மேலும் பேசிய திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பொன்னுசாமி, “பாமக சமுதாய உணர்வோடு தொடங்கப்பட்ட கட்சி. இதை கட்டமைத்ததில் நிறுவனர் ராமதாஸின் உழைப்பு அளப்பரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த விதத்தில், சமுதாய பாதுகாவலராக மருத்துவர் ராமதாஸை தவிர இங்கு வேறு யாரையும் அடையாளம் காட்ட முடியாது. அதிகாரம் யார் கையில் இருப்பது என்பது தான் தற்போதுள்ள பிரச்சினை.
அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து இப்போது நீக்கிவிட்டாலும் ராமதாஸூக்கு பிறகு அன்புமணி தான் தலைவராக வருவார். அதை இப்போதே இருந்துவிட்டுப் போகட்டுமே என்பது தான் எங்களைப் போன்றவர்களின் நிலைப்பாடு. அதேசமயம், இதனால் மருத்துவர் அய்யாவுக்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கட்சியின் எதிர்காலம் அன்புமணி தான் என்பதால் அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒருமுகமாக நின்று வரவேற்பு அளித்துள்ளோம். அதேபோல், நாளைக்கே மருத்துவர் அய்யா எங்கள் மாவட்டத்துக்கு வந்தாலும் அவருக்கும் இதேபோன்ற வரவேற்பையும், மரியாதையையும் நாங்கள் அளிப்போம். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இப்போது நடப்பது பனிப்போர். இது எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வந்துவிடும். அதுவரை நாங்கள் எல்லாம் பாமக-வின் எதிர்காலம் கருதி சின்னவரோடு சேர்ந்து பயணிப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT