Published : 20 Jun 2025 04:34 PM
Last Updated : 20 Jun 2025 04:34 PM
புதுச்சேரி: இலவச அரிசி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் மாறுபட்ட குற்றச்சாட்டுக்களைக் கூறி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மக்களுக்கு அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் இலவச அரிசி ஒரு கிலோ ரூ.47.70-க்கு கொள்முதல் செய்து ரூ.15 கமிஷனாக முதல்வர் மற்றும் துறை அதிகாரிகள் பெறுவதாக திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார். அதேபோன்று ஒரு கிலோ அரிசியில் ரூ.7 கமிஷன் பெறுவதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான வைத்தியலிங்கம் எம்.பி கூறியுள்ளார். இண்டியா கூட்டணியிலிருந்து கொண்டு மாறுபட்ட கமிஷன் தொகையை இவ்விரு கட்சிகளும் கூறுவதால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் குழப்பத்தைத் தீர்க்க திமுகவின் எதிர்க்கட்சி தலைவர் சிவாவும், திமுகவின் பிரதான கூட்டணிக் கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பியும் கடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கந்தசாமி ஒரு சேர அமர்ந்து பேசி தங்களது ஆட்சியில் எவ்வளவு கமிஷன் பெற்றோம், தற்போது எவ்வளவு பெறுகிறார்கள் என்பதை, கமிஷன் தொகையில் வித்தியாசம் இன்றி தெரிவிக்க வேண்டும்.
வைத்திலிங்கம் எம்.பி முதல்வராக இருந்தபோது அரிசியில் கமிஷன் பெற்று தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக அவரின் வீட்டு முன்பு சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரிசியைச் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். கடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வர் நாராயணசாமியும், உணவுத் துறை அமைச்சராக இருந்த கந்தசாமியும் அரிசியில் கமிஷன் பெறுகிறார்கள் எனக் கூறி, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரிசி போடுவதையே நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக வங்கியில் பணம் போட உத்தரவிட்டார்.
அப்போது இவர்கள் பெற்ற கமிஷன் எவ்வளவு என்பதையும் கூற வேண்டும். அதன் அடிப்படையில் தற்போதைய அரசு எவ்வளவு கமிஷன் பெறுகிறார்கள் என்பதை வாய்க்கு வந்தபடி வித்தியாசத்துடன் தெரிவிக்காமல் சரியாகத் தெளிவுபடுத்தினால் மக்களின் குழப்பம் தீரும். பல விஷயங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி ஆளும் அரசுக்கு திமுகவும், காங்கிரஸும் துணை போகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இணையவழி பிரிவு அலுவலகத்துக்குக் கவுரவ தலைவராகச் செயல்பட்டு வருகிறார். உண்மை நிலை என்னவென்று தெரியாமல் சிவா பேசி வருகிறார். குறிப்பாக விளம்பரத்தில் நடித்த இரண்டு நடிகைகளுக்கு இணையவழி போலீஸார் சம்மன் அனுப்ப வேண்டும் என்று மிகப் பெரிய கோரிக்கையை எழுப்பினார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போது அந்த இரண்டு நடிகைகளுக்கும் இணையவழி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவிலேயே இணையவழி குற்றச்செயல் அதிகம் நடக்கும் மாநிலம் புதுச்சேரிதான். புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் இணையவழி பிரிவை டிஜிபி உருவாக்க வேண்டும். டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் இணைந்து மத்திய இணையவழி பிரிவு உதவியைப் பெற வேண்டும். மேலும் புலனாய்வு திறமை பெற்ற 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.
துணைநிலை ஆளுநர் ஆன்மிக சுற்றுலா தளமாகப் புதுச்சேரியை மாற்றுவோம் எனக் கூறியுள்ளார். இந்து, கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் ஆடை கட்டுப்பாட்டைத் துணைநிலை ஆளுநர் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களில் அரைகுறை ஆடைகளுடன் உள்ளே வரும் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவைத் துணைநிலை ஆளுநர் பிறப்பிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT