Published : 19 Jun 2025 03:47 PM
Last Updated : 19 Jun 2025 03:47 PM
சென்னை: “பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் இருக்கும் கொடிக் கம்பங்கள் இடமாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜனநாயக நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் முதன்மை பெற்றவை என்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் போடுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி 28ம் தேதி வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேல் முறையீடு செய்துள்ளன. அவைகள் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 18) சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 2ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும். இல்லையெனில் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளில் நடப்படும் கொடிகளுக்கு தலா ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு கட்டணம் வசூலித்தால் கொடிக் கம்பங்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்றெல்லாம் கூறியிருப்பது கவலை அளிக்கிறது.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் இருக்கும் கொடிக்கம்பங்கள் இடமாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜனநாயக நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் முதன்மை பெற்றவை என்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட விபரம் குறித்து அரசு தரப்பில் உண்மையை பிரதிபலிக்கவில்லை என்று யாராவது ஒரு மனுப் போட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் அரசியல் கட்சிகளை அமில வார்த்தைகளில் விமர்சிக்குமா?
நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதுவதா? இப்படியான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீதிமன்றங்கள் பார்வைக்கு தெரிவித்து, அரசியல் கட்சிகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட அனுமதிக்கும் அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை மறு பரிசீலனை செய்து, திருத்த வேண்டும். இது தொடர்பாக வலுவான ஆதாரங்களுடன், வழிவழியாக பின்பற்றப்படும் உரிமைகளை பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT