Last Updated : 19 Jun, 2025 02:50 PM

 

Published : 19 Jun 2025 02:50 PM
Last Updated : 19 Jun 2025 02:50 PM

வல்லநாடு பாலத்தில் இருந்து விழுந்து காவலர் மரணம் - ரூ.30 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

உள்படம்: காவலர் சங்கர் குமார்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடந்த விபத்தில் சிக்கியவரை மீட்க சென்ற காவலர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த சங்கர் குமார் (வயது 31) என்பவர் நேற்று (18.06.2025) இரவு சுமார் 8.30 மணியளவில் முறப்பநாடு அருகில் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கை வைத்தபோது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டுமிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

காவலர் சங்கர் குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சங்கர் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? - ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து பகுதியை சேர்ந்த ஒரு நபர் வல்லநாடு பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சாலையில் வைத்திருந்த சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் அந்த நபர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தின் தடுப்பு சுவர் அருகே நின்று கொண்டிருந்த முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த தென்காசி மாவட்டம் கீழகழுநீர்குளம் பகுதியை சேர்ந்த காவலர் சங்கர் குமார் (31) திடீரென எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தார்.

ஆற்றில் தண்ணீர் இல்லாத பாறை பகுதியில் விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்தார். உடனே போலீஸாரும், அங்கிருந்த மக்களும் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலனஸ் வாகனம் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காவலர் சங்கர் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரை மீட்பதற்காக சென்ற காவலர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக போலீஸார் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x