Published : 19 Jun 2025 05:55 AM
Last Updated : 19 Jun 2025 05:55 AM
சென்னை: டெல்லியில் வீடுகளை இழந்ததால் பாதிக்கப்பட்ட 370 மதராஸி முகாம் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதார மீட்புக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் நாசர் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுதில்லி ஜங்புரா பகுதி, மதராஸி கேம்ப் குடிசைப் பகுதியில் வசித்து வந்த 370 தமிழ் குடும்பத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இடம் பெயர்ந்த தமிழ் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மீட்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்பம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று டெல்லியில், நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது. பயனாளிகள் விவரங்களை சரிபர்த்து, ஆவணங்களை பெற 7 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு திரும்பவும் அங்கு விடப்பட்டனர். வீடு திரும்பும் வரை அவர்களுக்கான உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.
பயனாளிகளுக்கான ரொக்கமாக ரூ.8 ஆயிரத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதால், தமிழ்நாடு இல்லத்திலேயே வங்கி முகவர்களை வரவழைத்து, வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு ஜன்தன் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. வயதான மற்றும் வீட்டிலிருந்து வெளிவர இயலாத பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
அத்தகைய பயனாளிகளுக்கு அவர்கள் தங்கி இருக்கும் இடத்துக்கே சென்று தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எம்.நாசர் இந்த நிவாரண உதவியை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் மா.வள்ளலார், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் அஷிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT