Published : 19 Jun 2025 05:50 AM
Last Updated : 19 Jun 2025 05:50 AM
சென்னை: சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கர்டர் விழுந்து வாலிபர் உயிரிழந்த விபத்தில் ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில், கடந்த 12-ம் தேதி இரவு 2 தூண்களுக்கு இடையே கர்டர் அமைக்கும் பணி நடைபெற்றபோது 40 அடி நீளமுள்ள கர்டர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி ரமேஷ் (40) என்பவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, நந்தம்பாக்கம் போலீஸார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் என இருதரப்பிலும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில்,திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்று இருந்தது.
2 நாட்களில் அனைவரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழுவினர் மொத்தம் 26 பேரிடம் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தி முடித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமாபுரம் மெட்ரோ ரயில் பணியின்போது நடந்த விபத்து குறித்து சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையின்படி, சம்பவத்துக்கு முதன்மையான பொறுப்பு ஒப்பந்ததாரருக்கே உண்டு. அதேபோல, அங்கு பணியில் இருந்த தலைமை பாதுகாப்பு மேலாளர், மூத்த பாதுகாப்பு மேலாளருக்கும் பொறுப்பு வகுக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட 4 பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மெட்ரோ திட்டப் பணியில் இருந்து அவர்கள் நீக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT