Published : 19 Jun 2025 09:33 AM
Last Updated : 19 Jun 2025 09:33 AM
அதிமுக - பாஜக கூட்டணி நிச்சயமற்ற கூட்டணி என்று சொல்லி வரும் திமுக, தங்களது கூட்டணி கட்டுக்கோப்புடன் இருப்பதாக சொல்லி வருகிறது. அதில் கல்லெறியும் விதமாக “திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கொளுத்திப் போட்டிருக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அந்தக் கூட்டணிக் கட்சியானது வாஜ்பாய் காலத்தில் எங்களோடு இருந்த கட்சிதான்” என எல்.முருகன் தெரிவித்திருப்பதை வைத்துப் பார்த்தால் அது மதிமுக என்பது தெளிவாகிறது. ஆனால், உண்மையிலேயே அந்தக் கட்சி பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா அல்லது இது பாஜக-வின் தந்திரமா என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் பாஜக அணியில் சேர்வதற்கான வாய்ப்பில்லை. அவர்கள் தவெக-வுடன் இணைந்தால் தான் உண்டு. ஆனால், விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி தெரியாத நிலையில், அவர்கள் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால், மதிமுக-வுக்கு அப்படியான கட்டாயம் ஏதும் இல்லை. இப்போதிருக்கும் சூழலில் அந்தக் கட்சி பாஜக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய மண்டல மதிமுக நிர்வாகிகள் சிலர், “திமுக மீது மதிமுக-வுக்கு ஏற்பட்ட அதிருப்தி இன்றைக்கு வந்ததல்ல... 2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். ஆனால், தனி சின்னம் என்றால் நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கமுடியும். உதயசூரியனில் போட்டியிட்டால் ஆறு தொகுதிகளை தரத் தயார் என்று சொல்லி நெருக்கடி கொடுத்தது திமுக. மதிமுக-வினர் கூடுதலான தொகுதிகளில் போட்டியிடலாமே என்பதற்காக 6 தொகுதிகளை வாங்கிக் கொண்டு உதயசூரியனில் போட்டியிட சம்மதித்தார் வைகோ. 2016-ல் மக்கள் நல கூட்டணியில் 29 தொகுதிகளில் போட்டியிட்ட தங்களை ஒற்றை இலக்கத்துக்குள் சுருக்கிய திமுக மீது அப்போதே மதிமுக-வுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
அடுத்ததாக, 2024 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக-வுக்கு ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கிய திமுக, அதிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம் கொடுத்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த துரை வைகோ, “செத்தாலும் சாவேனே தவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். இதனால், வேறு வழியில்லாமல் மதிமுக-வை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது திமுக. அப்போதும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான துரை வைகோ, அண்மையில் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்காமல் விட்ட விவகாரத்தில் திமுக மீது இன்னும் அதிருப்தி அடைந்தார்.
தலைசிறந்த நாடாளுமன்றவாதியான வைகோவை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப திமுக முன்வரவில்லை. கமலுக்கு வாய்ப்பளித்து வைகோ-வுக்கு வாய்ப்பளிக்க மறுத்ததன் மூலம் திமுக தங்களை உதாசீனம் செய்துவிட்டதாக துரை வைகோ ஆதங்கப்பட்டார். அதனால் தான், “வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது தங்களுக்கு வருத்தமே” என வெளிப்படையாகப் பேசினார். மதிமுக-வுடன் பாஜக, கூட்டணி விஷயமாக பேசியதா இல்லையா என்பதை வைகோவிடமும் துரை வைகோவிடமும் கேட்டால் தான் தெரியும். ஒருவேளை, அப்படி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அதற்கான காரணங்களாக இவை எல்லாம் தான் இருக்க முடியும்” என்றார்கள்.
மதிமுக தலைமை திமுக-வுடன் மனக்கசப்பில் இருப்பதைப் புரிந்து கொண்டு பாஜக சமயம் பார்த்து தூண்டில் வீசி இருப்பதாகவும், தங்கள் கூட்டணிக்கு மதிமுக வர சம்மதித்தால் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் தருவது குறித்தும் பேசலாம் என்று ஆஃபர் தந்திருப்பதாகவும் பலவாறாக செய்திகள் கசிகின்றன.
இதுகுறித்து மத்திய மண்டல திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை துரை வைகோ விரும்பாவிட்டாலும், அவரை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு. அதேபோல், கூட்டணிக் கட்சிகள் என்னதான் குடைச்சல் கொடுத்தாலும் கூட்டணி குலைந்துவிடக் கூடாது என்பதற்காக பொறுமை காக்கிறார் தலைவர் ஸ்டாலின். காரணம், 2021-ல் மிகக் குறைந்த வாக்கு சதவீத வித்தியாசத்தில் தான் அதிமுக-விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது திமுக. அதனால், சிறு சிறு கட்சிகளும் நமக்குத் தேவை என நினைக்கிறார் ஸ்டாலின்.
குறைந்தபட்சம் 8 முதல் 10 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் பெற முடியும் என நினைக்கிறார் துரை வைகோ. ஆனால், திமுக கூட்டணியில் அதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. ஒருவேளை, பாஜக கூட்டணியில் அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். இதனால் கூட அவர்கள் பாஜக தரப்பில் பேசி இருக்கலாம்.
2006-ல் திருச்சி திமுக மாநாட்டில் கலைஞருடன் கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருந்த வைகோ, மாநாடு கூடிய அதே நாளில், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். ஆக, மதிமுக இதற்கு முன்பும் பல நேரங்களில் மாற்றி யோசித்திருக்கிறது. அதுபோல இப்போதும் அவர்கள் பாஜக-வுடன் கூட்டணி பேசுவது உண்மையாக இருக்குமானால், போகவேண்டாம்... இருங்கள் என பிடித்து இழுக்கும் நிலையில் திமுக இல்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT