Published : 19 Jun 2025 06:46 AM
Last Updated : 19 Jun 2025 06:46 AM
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,825 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 6,040 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவானது நேற்று விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 114.13 அடியாகவும், நீர் இருப்பு 84.41 டிஎம்சியாகவும் இருந்தது.
இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 14-ம் தேதி காலை நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக பதிவானது. அன்று முதல் 16-ம் தேதி வரை அளவில் மாற்றமின்றி நீர்வரத்து நீடித்தது. 17-ம் தேதி காலை விநாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் விநாடிக்கு 6,500 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT