Published : 19 Jun 2025 06:16 AM
Last Updated : 19 Jun 2025 06:16 AM
சென்னை: சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களால் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், சில இடங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதாகவும் கூறி, ஏப். 28-ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றுமாறும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் அந்த உத்தரவில், அரசியல் கட்சியினர், பிற அமைப்பினர் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் முறையான அனுமதி பெற்று, நிரந்தர கொடிக் கம்பங்களை வைத்துக் கொள்ளலாம் என்றும், தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், பொது இடங்கள், சாலையோரங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, கொடிகள் கீழே விழுந்து மற்றவர்களின் கால்களில் மிதிபடும் நிலை இருப்பதால், கட்சியினர் தங்களது அலுவலகங்களில் கொடியேற்றி, மதிப்புடன் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.
மேலும், போக்குவரத்துக்காக மட்டுமே சாலைகள் பயன்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்தும் இதுபோன்ற விவகாரங்களில் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரக்கூடாது என அறிவுறுத்தி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்தநிலையில், கொடிக்கம்பம் தொடர்பான பிரதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், தமிழகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், நெல்லை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் 100 சதவீதம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டன. தேனி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தென்காசி, திருவள்ளூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கோவை, தருமபுரி மாவட்டங்களில் 93 முதல் 99 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டன. எஞ்சிய மாவட்டங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையை படித்த நீதிபதி, ‘‘சாலையோரங்கள் மற்றும் பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பல இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்காமல், அரசியல் கட்சிகளுக்கு ஏன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்? அரசுக்கு சொந்தமான இடங்கள், மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்தவும், கட்சிக் கொடிக்கம்பங்கள் வைப்பதற்கும் தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுகிறதா? தனியார் இடங்களில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்போது, அதற்கான தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுபோல, அரசுக்குச் சொந்தமான இடங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டியதுதானே?" என்றார்.
அதற்கு அரசு வழக்கறிஞர் முகிலன், ‘‘ இது தொடர்பாக அரசுத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார். அதையடுத்து நீதிபதி, ‘‘அரசியல் கட்சிகள் உள்ளிட்ட இதர அமைப்புகளின் பொதுக்கூட்டங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். இவ்வாறு கட்டணம் வசூலித்தால் கொடிக்கம்பங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். சாலையோரங்களிலும், சாலையின் நடுவிலும் எக்காரணம் கொண்டும் கொடிக்கம்பங்களை நடக்கூடாது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி கொடிக்கம்பங்கள் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் இல்லை என்பதை உறுதி செய்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஜூலை 2-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர்கள், ஜூலை 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT