Published : 19 Jun 2025 05:56 AM
Last Updated : 19 Jun 2025 05:56 AM
மதுரை / தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன.
கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே தற்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளின்போது மறைக்கப்பட்டுள்ளன. இந்த கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வருவதில்லை. ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்வுக்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறு.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஆகம நிபுணர்கள் குழுஅமைக்கவும், 24 தீர்த்த தூண்களை மீண்டும் அமைக்கவும், அதுவரை திருச்செந்தூர் கோயில் கும்பாபி ஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை தரப்பில், “கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை கண்காணிக்க நீதிமன்ற உத்தரவின்படி ஆகம நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ அல்லது புனித நீர் ஊற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது” என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “நிம்மதி தேடி கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. முதலில் அதற்கு தீர்வு காண வேண்டும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தேவையெனில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
பிரம்மாண்ட யாகசாலை: இதற்கிடையே கும்பாபிஷேக விழாவை யொட்டி, விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள்,நடராஜர் விமானக் கலசங்களில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராஜகோபுரத்தின் கீழ்பகுதியில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்படுகிறது. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “திருச் செந்தூர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழாநடைபெறவுள்ளது. இதற்காக 8 ஆயிரம் சதுரடியில் 76 ஹோமகுண்டங்களுடன் பிரம்மாண்ட வேள்விச்சாலை அமைக்கப்படுகிறது.
வேள்விச்சாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாகஸ்வர இன்னிசை நடைபெறும். காலை 7 முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT