Published : 19 Jun 2025 05:49 AM
Last Updated : 19 Jun 2025 05:49 AM
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்து எடுத்து வரப்பட்ட வேல் மதுரையில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகளில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. மதுரை பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள் ளன. இங்கு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
நீண்ட வரிசையில் காத்திருப்பு: மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரியை தரிசிக்க மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அறுபடை முருகனை தரிசித்தனர். நேற்று வேல் பிரதிஷ்டை நடைபெற்றது.
முன்னதாக, வைகாசி விசாக தினத்தில் பூஜை செய்யப்பட்ட வேலை விவசாயிகள், தொழிலாளர்கள், குறவர் சமூக மக்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், கலைஞர்கள் குழுவினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அந்த வேல் பூஜை செய்யப்பட்டு மூலவர் சிலை அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது முருக பக்தர்கள், பொதுமக்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.
பின்னர் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடினர். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தவச்சலம், தமிழக அமைப்பாளர் ராஜேஷ், பொதுச் செயலாளர் முருகானந்தம், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT