Published : 19 Jun 2025 05:48 AM
Last Updated : 19 Jun 2025 05:48 AM

கூடுதல் டிஜிபி-யை கைது செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம்

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஏடிஜிபியை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இப்படியொரு அதிகாரம் இருப்பதாக தங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏடிஜிபியின் இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவி்ட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ்(23), தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ(21) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் இளைய சகோதரரான 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்றனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை தொழிலதிபர் வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை திருவாலங்காடு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ மற்றும் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கடத்தல் சம்பவத்தில் ஏடிஜிபி ஜெயராமின் கார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அவரைக் கைது செய்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதேநேரத்தில், பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ-வின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அறிவுறுத்தி, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையடுத்து, சீருடையில் ஆஜராகியிருந்த ஏடிஜிபி ஜெயராமை, திருவள்ளூர் போலீஸார் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் கடந்த 17-ம் தேதி மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, ஜெயராமை இடைநீக்கம் செய்து தமிழக உள்துறைச் செயலர் உத்தரவிட்டார்.

சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஏடிஜிபி ஜெயராம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயராம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ‘‘ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் அதிரடியாக கைது செய்ய உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. உண்மையில் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கும், ஏடிஜிபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. இருந்தாலும் அவர் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளித்து வருகிறார். போலீஸாரின் 24 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அவரை இடைநீக்கம் செய்து தமிழக அரசும் அவசரகதியில் உத்தரவிட்டுள்ளது. எனவே, இடைநீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஏடிஜிபி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்போது அவரை இடைநீக்கம் செய்தது ஏன்? தமிழக அரசு இதுபோல செய்திருக்கக் கூடாது. இந்த இடைநீக்கம் 28 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் மூத்த போலீஸ் அதிகாரியின் மனஉறுதியை குலைத்துவிடாதா? இடைநீக்கத்துக்கான அவசியம் என்ன?" என்று அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘கடத்தல் வழக்கில் அவர் விசாரணை வளையத்தில்தான் உள்ளார். அவரை போலீஸார் கைது செய்யவில்லை. அவரது இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக, அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவிக்க அவகாசம் தேவை" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர். பின்னர் நீதிபதி மன்மோகன் "எனது 18 ஆண்டுகால பணி அனுபவத்தில் நீதிபதிகளுக்கு இப்படியொரு அதிகாரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்றார்.

பின்னர் நீதிபதிகள், "விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் ஏடிஜிபியின் இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசின் கருத்தைக் கேட்டு இன்று தெரிவிக்க வேண்டும்" என அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x