Published : 19 Jun 2025 04:49 AM
Last Updated : 19 Jun 2025 04:49 AM
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மீண்டும் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபரான விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். பின்னர் விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், எல். லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் இருவருக்கும் எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் இருவருக்கும் எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்தார். மேலும் அமலாக்கத்துறை தரப்பில் காணொலியில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை நம்புவதற்கு உரிய காரணங்கள் இருந்தாலோ அல்லது சந்தேகித்தாலோ சோதனை நடத்தலாம், என்றார்.
அமலாக்கத்துறையின் அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களுக்கும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைக்கும் வாதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்க அதிகாரம் உள்ளதா என மீண்டும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், சீல் வைக்க அதிகாரம் இல்லை என்றாலும் பூட்டிய வீடு மற்றும் அலுவலகத்தை உடைத்து சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, என தெரிவிக்கப்பட்டது.
மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் திரும்பப்பெறப்பட்டு, மனுதாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர்களான ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். மேலும் இந்த பிரதான வழக்கில் அமலாக்கத்துறை 4 வார காலங்களில் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT