Published : 18 Jun 2025 09:24 PM
Last Updated : 18 Jun 2025 09:24 PM
மேட்டூர்: எடப்பாடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை மாணவிகள் கழுவியதாக வீடியோ வைரலான நிலையில், அந்த தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை கழுவுவது போன்ற வீடியோ இன்று (ஜூன் 18) சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்த வீடியோவைப் பார்தது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரை ஆலச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து தாரமங்கலம் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி கல்வி அலுவலர் ராஜீ உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், “பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி முட்டை மற்றும் உணவு சமைப்பதில் ஊழல் செய்ததாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உணவு பாத்திரத்தை கழுவுவது போலவும், பள்ளி வளாகத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது போலவும் சத்துணவு அமைப்பாளர் வீடியோ எடுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு எடுத்த வீடியோவை பழிவாங்கும் நோக்கத்தில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT