Published : 18 Jun 2025 03:57 PM
Last Updated : 18 Jun 2025 03:57 PM
மதுரை: “கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்” என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.
மதுரையில் இன்று திமுக மாநில மாணவரணி சார்பில் கீழடி ஆய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விரகனூர் சுற்றுச் சாலையில் நடைபெற்றது. இதற்கு மாநில மாணவரணி செயலாளர் ரா.ராஜீவ்காந்தி தலைமை வகித்தார். தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி பங்கேற்று கண்டன உரையாற்றி பேசியது: “பண்பாட்டுத் தலைநகரான மதுரை அருகேயுள்ள கீழடி அகழாய்வில் கிடைத்த 17,914 தொல்பொருட்கள் சங்க காலத் தமிழர்கள் நகர நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளாக கிடைத்துள்ளன. இந்திய நாட்டின் வரலாற்றில் ஹரப்பா சிந்துவெளி நாகரிகம் மூத்தது எனவும், கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுக்கு முந்தையது என நிருபிக்கப்பட்டது. ஆனால், கீழடி ஆராய்ச்சி முடிவுகளின்படி தமிழர்களின் நாகரிகம் கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுக்கு முற்பட்டது என நிரூபித்துள்ளது. அதனை மத்திய பாஜக அரசு ஏற்க மறுத்து அரசிதழில் வெளியிட மறுத்து இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று வஞ்சிக்கிறது.
மேலும், மத்திய அரசு சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மாற்றப் பார்க்கின்றனர். அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் ரூ.2,000 கோடி. சரஸ்வதி நதி இருந்ததற்கான சுவடு, ஆதாரங்கள் கிடையாது. புராணங்களில் மட்டும் சொல்லப்படும் நதியை புதுப்பிக்க நினைக்கின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை ரூ.2,000 கோடியில் வகுத்தபோது அங்கு ராமர் பாலம் இருக்கிறது என கற்பனை கோட்டைக் காட்டி திட்டத்தை நிறுத்தினர்.
மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடியில் 3 ஆண்டுகள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பி அறிவியல் முறையில் அறிக்கை அளித்துள்ளார். இரும்பை முதன்முதலில் கண்டுபிடித்த பெருமை தமிழனுக்கு உண்டு என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளோம். 2500 ஆண்டுக்கு முன்பே வேளாண் தொழில் செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி போன்ற ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்தின் மீது பண்பாட்டுப் போர், கலாச்சார போரை பாஜக நடத்துகிறது.
மத்திய பாஜக அரசு அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து பழிவாங்குகிறது. அவரை மாற்றினால் எல்லாம் முடிந்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவிருக்கிறது. அங்கு நாங்கள் இருக்கிறோம் பார்த்துக் கொள்கிறோம். இந்த முறை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முதலில் கீழடி பிரச்சினையை எழுப்புவோம். கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். கீழடியின் அறிவிப்பை ஏற்காவிட்டால் இந்த ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்வோம்.
திமுக உறுப்பினர்களோடு உணர்வுடைய அனைவரையும் கிளர்ந்தெழச் செய்வோம். இப்பிரச்சினையை மக்களிடம் நீங்கள் கொண்டு செல்லுங்கள். இது மக்களின் போராட்டமாக மாற வேண்டும். தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை பாதுகாக்க வேண்டும். 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இரும்பை கண்டுபிடித்திருக்கிறோம். 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் எழுதியிருக்கிறோம். ஹரப்பாவில் இலக்கியச் சான்றுகள் இல்லை. இங்குள்ள தொல்பொருட்களுக்கு இலக்கியச் சான்றுகள் இருக்கிறது.
கிணறுகள் குறித்து பட்டினப்பாலையில் இருக்கிறது. நாள் அங்காடி, அல்அங்காடி என 24 மணிநேரமும் செயல்பட்ட அங்காடிகள் அன்றைக்கே இருந்திருக்கிறது என்றால் தமிழன் வாணிபத்தில் சிறந்து விளங்கியிருக்கிறான். வேளாண்மை, வளர்ச்சி, கட்டிடக்கலையில் உலகத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளோம்.
கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அறிவிக்கும் வரை ஓயமாட்டோம். தமிழர்களின் வரலாற்றை திட்டமிட்டு மறைப்பவர்களை தமிழகத்திற்குள் விடக் கூடாது. இவர்களை எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது. அதிலும் தமிழக மண்ணில் வர விடக்கூடாது என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழர்களின் வரலாறு காப்பாற்றப்பட வேண்டும். கீழடி எங்கள் தாய்மடி என்று நமது வரலாற்றை பண்பாட்டை காக்கும் கடமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT