Published : 18 Jun 2025 08:23 AM
Last Updated : 18 Jun 2025 08:23 AM
கடந்த முறையைப் போல இம்முறையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுமா என எதிர்பார்ப்புகள் எகிறிவரும் நிலையில், முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பனை எதிர்த்து நிற்பது யார் என்பதில் அதிமுக-வுக்கும் அமமுக-வுக்கும் இப்போதே போட்டி பலமாகி இருக்கிறது.
2021 தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளை திமுக மொத்தமாக அள்ளியது. திருவாடானையை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது. இதேபோல் இம்முறையும் நான்கு தொகுதிகளையும் திமுக கூட்டணிக்கே சாதகமாக்க இப்போதே பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது திமுக. சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் கணிசமாக இருக்கும் மாவட்டம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்துகிறது திமுக.
இம்முறையும் திருவாடானையை காங்கிரஸுக்குத்தான் திமுக ஒதுக்கும். அங்கே சிட்டிங் எம்எல்ஏ-வான கருமாணிக்கத்துக்குத்தான் சீட் என திமுக-வினரே தீர்மானமாக சொல்கிறார்கள். அதேபோல், ராமநாதபுரத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் சிட்டிங் எம்எல்ஏ-வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கும், முதுகுளத்தூரில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் மீண்டும் சீட் உறுதி என்கிறார்கள். இந்த மூன்று தொகுதிகளில், கடந்தமுறை திருவாடானையிலும், முதுகுளத்தூரிலும் அதிமுக போட்டியிட்டது. ராமநாதபுரத்தில் அதிமுக பலத்துடன் பாஜக போட்டியிட்டது.
இம்முறை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், அன்வர் ராஜா ஆகியோர் ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இவர்களைத் தவிர, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா சசிக்குமார், மண்டபம் ஒன்றியச் செயலாளர் மருதுபாண்டியன் உள்ளிட்டோரும் தங்களுக்கான சோர்ஸ்கள் மூலமாக ராமநாதபுரம் தொகுதியை பெறுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
திருவாடானை தொகுதியில் போட்டியிட கடந்த முறை அங்கு போட்டியிட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆனிமுத்து, தற்போதைய மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவியும், மாநில மகளிரணி இணைச் செயலாளருமான கீர்த்திகா முனியசாமி ஆகியோர் ஆட்களைப் பிடித்து ஆகவேண்டியதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த முறை அதிமுக-வில் சீட் வழங்காததால் முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் திமுக-வில் இணைந்தார். இம்முறை பரமக்குடி தொகுதியில் இவருக்கு திமுக வாய்ப்பளிக்கலாம் என்கிறார்கள். சிட்டிங் எம்எல்ஏ-வான முருகேசன், போகலூர் ஒன்றியச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோரும் ரேஸில் இருக்கிறார்கள்.
அதேபோல், திமுக-வில் ஏமாற்றம் கண்டு அதிமுக-வில் இணைந்த முன்னாள் மாவட்ட பதிவாளர் பாலு பரமக்குடிக்காக ரூட் பிடித்து வருகிறார். இவரைத் தவிர, முன்னாள் எம்எல்ஏ-வான சதன் பிரபாகர், முத்தையா ஆகியோரும் பரமக்குடிக்காக மோதுகிறார்கள். தங்களுக்குச் சாதகமான தொகுதி என பாஜக இந்தத் தொகுதியைக் கேட்டால் பாஜக மாநில பொதுச்செயலாளரான பொன்.பாலகணபதிக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்கிறார்கள்.
விஐபி தொகுதியான முதுகுளத்தூரில் இம்முறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சரியான போட்டியை தரவேண்டும் என திட்டமிடும் அதிமுக தலைமை, அங்கு கல்லூரி அதிபரான மலேசியா பாண்டியனை நிறுத்தும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதே தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர் இந்த மலேசியா பாண்டியன். 2021-லும் இங்கு தனக்கு மீண்டும் சீட் கொடுக்கும் காங்கிரஸ் தலைமை என எதிர்பார்த்திருந்தார். ஆனால், தொகுதியை ராஜகண்ணப்பனுக்காக எடுத்துக் கொண்டது திமுக. இதனால், கடும் அதிருப்தியடைந்த மலேசியா பாண்டியன், காங்கிரஸை கைகழுவிவிட்டு ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு திடீரென அவர் அதிமுக-வில் இணைந்தார். “முதுகுளத்தூர் தொகுதியில் எனக்கு சீட் கொடுத்தால் கண்ணப்பனை தோற்கடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லியே தான் மலேசியா பாண்டியன் அதிமுக-வில் இணைந்ததாகச் சொல்வார்கள். இந்தத் தொகுதியில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.
தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்கை வைத்திருக்கும் டி.டி.வி.தினகரனும் முதுகுளத்தூர் தொகுதியை தனது லிஸ்ட்டில் டிக் அடித்து வைத்திருக்கிறார். கடந்த மாதம் முதுகுளத்தூருக்கு வந்திருந்த தினகரன், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும்படி அமமுக மாவட்டச் செயலாளரும் முதுகுளத்தூரின் முன்னாள் எம்எல்ஏ-வுமான முருகனுக்கு அறிவுறுத்திச் சென்றதாகச் சொல்கிறார்கள். தினகரனும் இப்போது அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால், முதுகுளத்தூர் தொகுதி பாண்டியனுக்கா முருகனுக்கா என்பது பழனிசாமியின் கையில் தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT