Published : 18 Jun 2025 01:03 AM
Last Updated : 18 Jun 2025 01:03 AM

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழு தகுதியான நபர்களை தேர்வுசெய்யும்.

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரு பிரிவுகளிலும் தலா 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனங்கள் பிரிவில் தேர்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், விருதும், தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், விருதும் வழங்கப்படும். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இதுவரை மாநில அளவிலான அங்கீகாரத்தைப் பெறாத ​​தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவ்விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.

ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, rajbhavantwoawards2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்ப வேண்டும். மேலும், துணை ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை-22 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை 5 மணி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x