Published : 15 Jun 2025 06:46 PM
Last Updated : 15 Jun 2025 06:46 PM
சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர்கள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் (Centralised server) இல்லாததால் பணிமனை அளவிலும், தலைமை அலுவலக அளவிலும் பல பணிகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு நேரமும், மனித உழைப்பும் வீணாகிறது.
ஆன்லைனில் எடுத்துக் கொள்ள கூடிய தகவல்களை கூட எக்ஸல் மற்றும் கூகுள் ஷீட் மூலமாக பணி நேரம் முடிந்த பிறகும் என்ட்ரி செய்ய சொல்லி பணியாளர்களுக்கு தேவை இல்லாத பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கணினி பிரிவில் பணி செய்யும் ஊழியர்களை நேர காலமின்றி வேலை வாங்குவதும், தலைமையகத்துக்கு நேரில் வரவழைத்து காக்க வைத்து, தகாத வார்த்தைகளால் பேசி திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
முக்கியமாக மிக பழமையான மென்பொருள் மூலம் பணிகள் செய்யப்படுவதால் தற்காலத்துக்கு ஏற்ற முறையில் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடிவதில்லை. இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT