Published : 15 Jun 2025 05:00 PM
Last Updated : 15 Jun 2025 05:00 PM
மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடத்த 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜைகள் நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து மாநாட்டுக்கு போலீஸார் விதித்துள்ள 52 நிபந்தனைகளில், மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியிடம் வாகன பாஸ் பெற வேண்டும், இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது, மாநாட்டில் பங்கேற்போர் விவரங்களை ஜூன் 16-க்குள் வழங்க வேண்டும், அறுபடை வீடுகள் மாதிரி அமைக்க அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சியி டம் அனுமதி பெற வேண்டும், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது ஆகிய 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரியும் இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, மாநாடு மற்றும் அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து, அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்தவும், இந்து முன்னணி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதியின் முழு உத்தரவு இன்று வெளியானது. அதில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25, ஒவ்வொரு நபருக்கும் தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு தனி நபருக்கும் அல்லது அமைப்புக்கும் மத நம்பிக்கை அடிப்படையில் செயல்பட சுதந்திரம் உள்ளது. இந்த உரிமை மதவாதம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிப்பதாக இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.
இந்தியா பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட பன்முகத் தன்மை சமூகம் கொண்ட நாடு. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரம் சட்டம் - ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதாரமாக நாளிதழ்களில் வெளியான இந்து முன்னணி மாநில தலைவர் மற்றும் மத்திய அமைச்சரின் பேட்டிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத அமைப்புகளை அரசியலுக்காகவும் பிற கட்சிகளுக்கும் பயன்படுத்தினால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத நிறுவன (தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் 1988-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 6, மத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஊர்வலங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது. இந்த வழக்கில் நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் தனித்தனியாக அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியை சந்தித்து அணுகி பாஸ் பெறுவது கடினம் என மனுதாரர் தரப்பில் கூற்பட்டுள்ளது.
இருப்பினும் வாகன பேரணியை தடுக்கும் நோக்கத்தில் இந்த நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இதனால் இதில் தலையிட வேண்டியதில்லை. அதே நேரத்தில் வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும். மறுத்தால் உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
போலீஸார் வாகன பாஸ் வழங்குவதால் வாகன எண்ணிக்கை அடிப்படையில் பங்கேற்பாளர்களின் விபரங்களை போலீஸாரால் சேகரிக்க முடியும். இதனால் மாவட்டம் வாரியாக மாநாட்டுக்கு வருவோர் விபரங்களை வழங்க வேண்டியதில்லை. மாநாட்டு வளாகத்தில் இரு டிரோன்கள் பறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத் துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. மாநாடு நடத்த இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதால், அதே இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க தனியாக அனுமதி பெற வேண்டிய தில்லை. வேறு இடங்களில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என இடையீட்டு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.
அதே நேரத்தில் திருப்பதி பெருமாள் மற்றும் சிவன் கோயில்களின் மாதிரிகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநாடு நடைபெறும் இடத்தில் குடியிருப்புகள், பள்ளிகள் இருப்பதால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பு கூறுவதை ஏற்க முடியாது.
ஏனெனில் அந்த இடத்தில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளின் மாநாடுகள் நடைபெற்றுள்ளது. அதற்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். ஒலி பெருக்கி பயன்பாட்டை பொறுத்தவரை அரசு தெரிவிக்கும் அளவிற்குள் இருக்குமாறு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மாநாட்டுக்குள் பங்கேற்பாளர்களை கட்டுப்படுத்த போலீஸார் தேவையில்லை, தங்கள் தன்னார்வலர்கள் இருப்பதாக மாநாட்டு நடத்துவோர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள வேண்டும். இந்த மாநாட்டால் மத நல்லிணக்கம் சீர்குலைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் சிலரின் பேச்சுக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT