Published : 14 Jun 2025 07:14 PM
Last Updated : 14 Jun 2025 07:14 PM
மதுரை: தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை திருமங்கலம் அருகே சூறையாடப்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்து, கல்லுப்பட்டி - பேரையூர் சாலையிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது: “திருமங்கலம் தொகுதியிலுள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூக விரோதிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். பணியில் இருந்த காவலர் உயிருக்கு அச்சுறுதல் செய்துள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த இச்செயல் வெட்கக்கேடானது.
அதிமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தலின்படி வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்குச் செல்ல முயன்ற, அத்தொகுதியின் எம்எல்ஏவும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். தொகுதி எம்எல்ஏவின் கடமையைக்கூட செய்யவிடாமல் திமுக அரசு தடுக்கிறது. திமுக ஆட்சியில் ரவுடிகள் சுதந்திரமாக உள்ளனர்.
அண்மையில் ஒரு வியாபாரியிடம் திமுக ரவுடி ஒருவர் மாமூல் கேட்டு, அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த வியாபாரி, காவல் நிலையம், ஆட்சியர், முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனுக்களை அனுப்பியுள்ளார். ஆனால், அந்த ரவுடி, ‘இதுவரை 16 கொலைகளை செய்துளேன். 17-வது நபராக உன்னை கொலை செய்வேன்’ என மிரட்டி வருகிறார். இப்படித்தான் ஆட்சி உள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது. திமுக ஆட்சிக் காலம் என்பது ரவுடிகள் காலம் என்றாகிவிட்டது. நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். தற்போது காவல் துறைக்காகவும் குரல் கொடுக்கிறோம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT