Published : 14 Jun 2025 08:09 AM
Last Updated : 14 Jun 2025 08:09 AM
பேசக்கூடாததைப் பேசி திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தைப் பறிகொடுத்த பொன்முடி, நீதிமன்ற நெருக்கடியால் மந்திரி என்ற மகுடத்தையும் இழந்தார். ஆனாலும், தன்னை மீறி தனது எல்லைக்குள் யாரும் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் பொன்முடி, இப்போது இலாகா இல்லாத அமைச்சர் போலவே வலம் வருவதாக ஆளும் கட்சியினரே அறிக்கை வாசிக்கிறார்கள்.
தவிர்க்க முடியாத நிர்பந்தத்தின் காரணமாக பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலும் விழுப்புரம் மாவட்டத்துக்கு புதிய அமைச்சர், பொறுப்பு அமைச்சர் என யாரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கவில்லை. இந்த நிலையில், அண்மையில் தேர்தல் பணிகளை கவனிக்க மண்ட பொறுப்பாளர்களை அறிவித்த போது அமைச்சர் எ.வ.வேலு விழுப்புரம் மாவட்டத்துக்கு மண்டலப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, பொன்முடிக்கு போட்டியாக இன்னொரு அமைச்சர் மாவட்டத்துக்குள் அதிகாரம் செய்ய வருவதைக் கொண்டாடித் தீர்த்த பொன்முடி எதிர்ப்பாளர்கள், வேலுவை வரவேற்று சுவர் விளம்பரங்களை தீட்டினார்கள். அதிலும் சிலர் அரசியல் செய்தார்கள்.
இதையெல்லாம் ஜீரணித்துக் கொள்ளமுடியாத பொன்முடி, ‘இதற்கு மேலும் என்னை அசிங்கப்படுத்த முடியுமா?’ என திமுக சீனியர்களிடம் வெடித்ததாகச் சொல்கிறார்கள். இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பொறுப்பாளராக மாற்றி அறிவித்தது திமுக தலைமை. வன்னியருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே எம்ஆர்கே-வுக்கு மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது என்று வெளியில் சொல்லப்பட்டாலும் உள்ளுக்குள் நடந்த அரசியல் வேறு என்கிறார்கள்.
இந்த நிலையில், அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் காரில் இருந்த தேசியக் கொடிதான் எடுக்கப்பட்டதே தவிர மற்றபடி நிழல் அமைச்சராகவே தான் பொன்முடி வலம் வருகிறார். மாவட்டத்தில் அவருக்கான முக்கியத்துவம் துளியும் குறைக்கப்படவில்லை. அமைச்சருக்கான பிஎஸ்ஓ, மற்றும் வீட்டுக்கான போலீஸ் பாதுகாப்பு எதுவுமே திரும்பப் பெறப்படவில்லை.
மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பொன்முடிக்குத்தான் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதனால் அரசு விழாக்களில் பொன்முடியின் அதிகாரம் தூள் பறக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், விழுப்புரத்தில் லட்சுமணன் எம்எல்ஏ கலந்து கொண்ட நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு, பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட அரகண்டநல்லூரில் பொன்முடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தான் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “திமுக-வுக்கு கடந்த 35 ஆண்டுகளாக பக்கபலமாக இருந்தவர் பொன்முடி. மு.க.அழகிரி, கனிமொழி போன்றவர்களால் கட்சிக்குள் பிரச்சினைகள் வெடித்த போதெல்லாம் ஸ்டாலினுக்கு ஆதரவாக நின்றார். அதனாலேயே கட்சிக்குள் அவரது செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்தது. ஆனால், அந்த செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளத் தவறிவிட்டார். சர்ச்சைப் பேச்சால் பொன்முடியை துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய போது அதுகுறித்து சமாதானத்துக்காகக் கூட அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. இதனால் விரக்தி அடைந்தவர், அடுத்ததாக அமைச்சர் பதவியையும் இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான போது ரொம்பவே உடைந்து போனார்.
இருந்த போதும், தனக்குப் பதிலாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி தரக் கூடாது, பொறுப்பு அமைச்சரையும் நியமிக்கக் கூடாது, மாவட்ட நிர்வாகத்தில் எனக்கான முக்கியத்துவம் எவ்விதத்திலும் குறையக் கூடாது என்ற உத்தரவாதத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு தான் அமைச்சர் பதவியை விட்டு விலகினார். சீனியர் என்பதால் தலைமையும் அவரது இந்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டது. அதனால் தான் இதுவரை பொறுப்பு அமைச்சர் கூட நியமிக்கப்பட வில்லை” என்றனர்.
மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தாலும் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக சற்றே அடக்கி வாசிக்கும் பொன்முடி, தனது மகன் கவுதம சிகாமணி மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். அதேசமயம் தனது அரசியல் எதிரிகளான முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திண்டிவனம், செஞ்சி, மயிலம் தொகுதிகளிலும் லட்சுமணன் எம்எல்ஏ மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் விழுப்புரம், வானூர் தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் மறந்தும்கூட மூக்கை நுழைப்பதில்லை.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தேசியக் கொடி கட்டிய காரிலேயே பயணித்து பழக்கப்பட்டுவிட்ட பொன்முடி, இப்போது திமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்கிறார். அவருக்குள் இருக்கும் அந்த ஏக்கத்தைப் போக்க, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேசியக் கொடி கொட்டிய தனது காரின் முன் இருக்கையில் தனது நண்பர் பொன்முடிக்கு இடமளித்து அழைத்துச் செல்வதையும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விழுப்புரம் திமுக-வினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT