Published : 13 Jun 2025 10:13 PM
Last Updated : 13 Jun 2025 10:13 PM
பனையூர்: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன.
மொத்தம் 13 கிராமங்களில் இருந்து இந்த விமான நிலையத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலங்களில் நீர்நிலைகள், ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள், வீடுகள், அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்டவை அடக்கம். இந்த விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்படும் கிராமங்களில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாக வைத்து ஆயிரம் நாளை கடந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் பரந்தூர் சென்று அங்கு போராடி வரும் மக்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் ஜி.சுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சந்தித்துப் பேசினர்.
பரந்தூர் மக்களின் போராட்டம் வெற்றியடைய தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும் என விஜய் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரந்தூர் மக்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று தமது முழு ஆதரவை தெரிவித்த விஜய்க்கு போராட்டக் குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT