Published : 12 Jun 2025 08:23 AM
Last Updated : 12 Jun 2025 08:23 AM
கோவையில் கடந்த ஏப்ரல் 27-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அன்றைய தினம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி வரவில்லை. அப்போது இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிறுத்தி திமுக-வினர் நடத்திய தடாலடி வசூல் வேட்டை தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த உதயநிதி வரவில்லை என இப்போது செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.
கோவை செட்டிப்பாளையத்தில் ஏப்ரல் 27-ம் தேதி மாவட்ட நிர்வாகமும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டுப் பேரவையும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பிரம்மாண்டமாக நடத்தின. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவரும், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான தளபதி முருகேசன் தான் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக வசூல் வேட்டை நடத்தியதாக இப்போது இவரைச் சுற்றித்தான் சர்ச்சை வெடித்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக-வினர் சிலர், “ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடபுடலாக ஏற்பாடு செய்த தளபதி முருகேசன், கார், பைக் என விலைமதிப்பு மிக்க பரிசுகளையும் அறிவித்திருந்தார். இதற்கெல்லாம் பணம் வேண்டுமே... அதற்காக கோவையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல இடங்களில் டார்கெட் வைத்து வசூல் வேட்டை நடத்தி இருக்கிறார்கள்.
தொழில்துறையினரிடமும் பெரும் தொகை வசூலாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொள்வதாக அவரது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றாலும் அன்றைய தினம் கோவையில் அவர் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் ஜல்லிக்கட்டுப் பரிசளிப்பு நிகழ்விலும் பங்கேற்பார் என்று சொன்னார்கள்.
இதனிடையே, வசூல் நெருக்கடிகளால் அவதிக்குள்ளான பெரு நிறுவனங்கள் சில, தங்களின் வசூல் சங்கடங்களை மேலிடம் வரைக்கும் கொண்டு போய்விட்டன. இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வராமலேயே போய்விட்டார் உதயநிதி” என்றார்கள். தளபதி முருகேசனின் திடீர் வளர்ச்சி குறித்து பேசிய இன்னும் சில திமுக புள்ளிகளோ, “காங்கிரஸில் இருந்து திமுக-வுக்கு வந்த தளபதி முருகேசன் மிகக் குறுகிய காலத்தில் மாவட்டச் செயலாளராக வரக் காரணமே செந்தில்பாலாஜி தான்.
கரூரில் பிரபலமாக இருக்கும் ஒரு ‘மெஸ்’ உரிமையாளருக்கு நெருக்கமாக இருப்பவர் தளபதி முருகேசன். அவர் சிபாரிசு செய்ததால் தான் முருகேசனை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் செந்தில்பாலாஜி அமரவைத்தார். பொறுப்புக்கு வந்தது முதலே தன்னை வளப்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கும் தளபதி முருகேசன், கட்சிப் பதவிகள், அறநிலையத்துறை நியமனங்கள் உள்ளிட்டவற்றில், இஷ்டத்துக்கு புகுந்து விளையாடுகிறார். மொத்தத்தில், திமுக-வை வைத்து மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறார்” என்கிறார்கள்.
இந்தப் புகார்கள் குறித்து தளபதி முருகேசனிடம் கேட்டதற்கு, “ஜல்லிக்கட்டு போட்டிக்காக வசூல் வேட்டை நடத்தியதாக என் மீது தெரிவிக்கப்படும் புகார்கள் முற்றிலும் பொய். கோவை ஜல்லிக்கட்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஆனாலும், விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டதாக கேள்விப்பட்டு என்னை அழைத்து உதயநிதி வெகுவாகப் பாராட்டினார். கட்சிக்காக நான் ஆற்றி வரும் சீரிய பணிகள் குறித்து தலைமைக்கு தெரியும். எதிர்வரும் காலத்தில் அதற்கான உரிய அங்கீகாரத்தை தலைமை எனக்கு வழங்கும். எனவே என் மீது புகார் தெரிவிப்பவர்களுக்கு நான் கூறும் பதில், வெயிட் அண்ட் ஸீ என்பது தான்” என்றார்.
மாவட்டச் செயலாளராக இருக்கும் தளபதி முருகேசன், அடுத்து எம்எல்ஏ, அமைச்சர் என்ற கனவில் இருக்கிறார். அந்தக் கனவுகளை தகர்க்கும் விதமாக அவரது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் வசூல் வேட்டை விவகாரத்தை பூதாகரமாக்குவதாகவும் இன்னொரு தரப்பு சொல்கிறது. எது உண்மையோ... மொத்தத்தில் கோவையில் தொழில் துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் ஒருவிதமான் அதிருப்தியில் இருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT