Published : 10 Jun 2025 04:31 AM
Last Updated : 10 Jun 2025 04:31 AM

அமித் ஷாவின் பேச்சால் திமுகவினருக்கு நடுக்கம்: மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல்

சென்னை: ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும். அமித் ஷாவின் பேச்சால் திமுகவினர் நடுங்கிப் போய் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம் வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டு போயிருக்கிறது. எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதில் 10 சதவீதத்தைக் கூட செய்யாமல் வரலாறு காணாத ஊழல் செய்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து குடும்ப ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

மதுபான ஊழலில் திளைத்து, பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய டில்லி முதல்வராக இருந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று சூளுரைத்து இருக்கிறார் அமித் ஷா.

ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொடுக்கும் பணத்தை, தமிழகத்தின் நலனுக்கு செலவு செய்யாமல், ஏழை - எளிய மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் தடுத்து வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்களும் காத்து இருக்கின்றனர்.

தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, மருத்துவம், பொறியியல் உட்பட உயர் கல்வியை தமிழில் கற்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு இன்றுவரை திமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.

அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லும் திமுக அரசுக்கு, வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு பதிலடி கொடுக்கும்.

ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடி, ஆட்சியை கைப்பற்றும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x