Published : 10 Jun 2025 12:23 AM
Last Updated : 10 Jun 2025 12:23 AM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜூன் 15 வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூன் 10) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 11) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12-ம் தேதி கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

13 முதல் 15-ம் தேதி வரை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 7 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர், சேலம் மாவட்டம் சந்தியூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 5 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், ஓசூர், பையூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x