Published : 09 Jun 2025 05:35 PM
Last Updated : 09 Jun 2025 05:35 PM
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தில் பயணிகள் ஏறிய விவகாரத்தில், அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை ஓட்டுநரை காலணியால் தாக்கிய பேருந்து நிலைய துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாராபுரம் கிளையை சேர்ந்த அரசு பேருந்து நேற்று (ஜூன் 8) இரவு மதுரைக்கு சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. அந்தப் பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு அதிகாலை 2 மணியளவில் வந்ததும் வெளியூர் பேருந்துகள் பயணிகளை இறக்கி விடும் இடத்தில் (பெரிய தண்ணீர் தொட்டி அருகே) பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
நேற்று வைகாசி மாதத்தின் கடைசி மூகூர்த்த நாள் என்பதால் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்தால் இருக்கை கிடைக்காது என நினைத்து ஏராளமான பயணிகள் பயணிகளை இறக்கிவிடும் இடங்களில் காத்திருந்தனர். ஆரப்பாளைம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆரப்பாளையத்துக்கு தாராபுரம் கிளை பேருந்து வந்ததும், பயணிகள் இறங்கிய அடுத்த நொடியில் பயணிகள் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர். இருக்கைகள் நிரம்பியும் ஏராளமான பயணிகள் நின்று கொண்டு பயணிக்கவும் தயாராக இருந்தனர்.
இந்நிலையில், பேருந்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்லாமல் பயணிகளை ஏற்றியதாக கூறி பேருந்தின் நடத்துநரிடம் இருந்த இன்வாய்ஸை ஆர்ப்பாளையம் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (இயக்கம்) மாரிமுத்து வாங்கிக் கொண்டார். மேலும் பேருந்து நிலையத்துக்குள் பேருந்தை கொண்டு வந்து நிறுத்த உத்தரவிட்டார்.
இதனிடையே, ஓட்டுநர் கணேசனை இருக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் பேருந்தை எடுக்குமாறு பயணிகள் வலியுறுத்தினார். இன்வாய்ஸை திரும்ப பெற்ற பிறகே பேருந்தை எடுக்க முடியும் என்பதால் ஓட்டுநர் பேருந்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு சென்று நிறுத்தினார். அங்கும் பேருந்தை எடுக்குமாறு ஓட்டுநருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பயணிகள் அனைவரும் பேருந்து நிலைய போக்குவரத்துக் கழக அலுவலகம் சென்று துணை மேலாளர் மாரிமுத்துவை சந்தித்து நடத்துநரிடம் இன்வாய்ஸை திரும்ப கொடுத்து பேருந்து கிளம்ப அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கு மாரிமுத்து, “நடத்துநர் ஒழுங்கீனமாக நடந்துள்ளார். அவருக்கு மெமோ கொடுத்த பிறகுதான் பேருந்து புறப்படும். இன்னொரு பேருந்து வரும். அதில் செல்லுங்கள்” எனக் கூறினார். இதை ஏற்க மறுத்த பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் கணேசன் அங்கு வந்தார். உடனே மாரிமுத்து அலுவலகத்துக்கு உள்ளே சென்று ஓட்டுநர் கணேசனை அழைத்தார். அங்கு கணேசனை, மாரிமுத்து காலணியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த கணேசன், அங்கு நின்றிருந்த சக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளிடம் இதை தெரிவித்தார். அவர்கள் மாரிமுத்துவை கண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலை தளத்தில் வைரலானது. இதையடுத்து மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டித்துள்ளன.
இந்நிலையில் ஓட்டுநரை காலணியால் தாக்கிய துணை மேலாளர் மாரிமுத்து மற்றும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும், மாரிமுத்துவை நிரந்தர பணி நீக்கம் செய்யக் கோரி மதுரை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் சிஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT