Published : 09 Jun 2025 02:00 PM
Last Updated : 09 Jun 2025 02:00 PM

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல் நலக்குறைவால் காலமானார்

முன்னாள் அதிமுக எம்எல்ஏ சு. குணசேகரன்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சு. குணசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜுன் 9) காலை உயிரிழந்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன்(58). இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் குணசேகரன் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார்.

2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தொடர்ந்து 2-ம் முறையாக போட்டியிட்டு, வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் தோற்றார். தற்போது மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார்.

அவரது சடலம் இன்று திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. தீவிர களப்பணியாளராக இருந்தவர். சட்டப்பேரவையில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனம் செய்தபோது, அவையில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிரித்து மகிழ்ந்தது அன்றைக்கு சமூக வலைதளங்களில் வைரலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x