Published : 09 Jun 2025 04:12 AM
Last Updated : 09 Jun 2025 04:12 AM
சென்னை: மனைவி தனது நோய்வாய்ப்பட்ட பெற்றோரை பராமரிப்பதை கணவருக்கு இழைக்கும் கொடுமையாகவோ, மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவோ கருத முடியாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், விவாகரத்து கோரிய கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை வடபழனியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் குமரன் என்பவருக்கும், சென்னை நந்தனத்தில் தனது அத்தையுடன் வசித்து வந்த பட்டதாரி பெண் செல்விக்கும் கடந்த 2017 ஜூனில் திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) திருமணத்துக்கு பிறகு, இருவரும் நந்தனத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றனர்.
அப்போது, குமரன் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்த நேரத்தில், செல்வி தனது நோய்வாய்ப்பட்ட தந்தை மற்றும் தாயை ஊரில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து, மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். உதவிக்காக தனது அத்தையையும் அங்கு அழைத்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளம் காலியான நிலையில், செல்வியின் பெற்றோர் அங்கு குடிபெயர்ந்தனர். தரைதளத்தில் குமரன் - செல்வி வசித்தனர்.
இந்த நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி சம்மதிக்கவில்லை என விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் குமரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த செல்வி, “எனது பெற்றோரை மருத்துவ சிகிச்சைக்காக ஊரில் இருந்து அழைத்து வந்தேன் என்ற ஒரே காரணத்துக்காக, கணவர் விவாகரத்து கோருகிறார். இதற்கிடையே, தந்தை இறந்துவிட்ட நிலையில், கணவர் தன்னை தனியாக விட்டு பிரிந்து சென்று விட்டார்” என்று கூறி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ‘குமரனின் கூற்றில் உண்மை இல்லை’ என்று கூறி, விவாகரத்து வழங்க மறுத்து, சேர்ந்து வாழ உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குமரன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஜெ,நிஷாபானு, ஆர்.சக்திவேல் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது.
நீதிபதிகள் கூறியதாவது: வயதான பெற்றோரை இறுதி காலத்தில் பராமரிக்கும் பொறுப்பும், கடமையும் மகன், மகள் ஆகிய இருவருக்கும் உள்ளது. ஒரு மகளாக அந்த பெண் தனது நோய் வாய்ப்பட்ட தந்தையை தனது வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளார். இதை கணவனுக்கு மனைவி இழைக்கும் கொடுமையாகவோ, மன உளைச்சலாகவோ கருத முடியாது. இருவரும் கடந்த 2020 ஏப்ரல் வரை மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், குழந்தை பெற மனைவி சம்மதிக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தனது தந்தையை இழந்து தவித்த மனைவிக்கு ஆறுதல் கூறுவதற்குகூட மனமில்லாமல் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தது ஏற்புடையது அல்ல. எனவே, விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டு குமரனின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT