Published : 09 Jun 2025 04:12 AM
Last Updated : 09 Jun 2025 04:12 AM

நோய்வாய்ப்பட்ட பெற்றோரை மனைவி பராமரிப்பதை கணவனுக்கு இழைக்கும் கொடுமை என்பதா? - விவாகரத்து மனு தள்ளுபடி

சென்னை: மனைவி தனது நோய்​வாய்ப்​பட்ட பெற்​றோரை பராமரிப்​பதை கணவருக்கு இழைக்​கும் கொடுமை​யாகவோ, மன உளைச்​சல் ஏற்​படுத்​தி​ய​தாகவோ கருத முடி​யாது என்று கூறி​யுள்ள உயர் நீதி​மன்​றம், விவாகரத்து கோரிய கணவரின் மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்தது.

சென்னை வடபழனி​யில் மென்​பொருள் நிறு​வனம் நடத்தி வரும் குமரன் என்​பவருக்​கும், சென்னை நந்​தனத்​தில் தனது அத்தையுடன் வசித்து வந்த பட்​ட​தாரி பெண் செல்விக்​கும் கடந்த 2017 ஜூனில் திரு​மணம் நடந்​தது. (பெயர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.) திரு​மணத்​துக்கு பிறகு, இரு​வரும் நந்​தனத்​தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்​குடித்​தனம் சென்​றனர்.

அப்​போது, குமரன் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு சென்​றிருந்த நேரத்​தில், செல்வி தனது நோய்​வாய்ப்​பட்ட தந்தை மற்​றும் தாயை ஊரில் இருந்து வீட்​டுக்கு அழைத்து வந்​து, மருத்​துவ சிகிச்சை அளித்து வந்​துள்​ளார். உதவிக்​காக தனது அத்​தையை​யும் அங்கு அழைத்து வந்​தார். அந்த வீட்​டின் மேல்​தளம் காலி​யான நிலை​யில், செல்​வி​யின் பெற்​றோர் அங்கு குடிபெயர்ந்​தனர். தரைதளத்​தில் குமரன் - செல்வி வசித்​தனர்.

இந்த நிலை​யில், குழந்தை பெற்​றுக்​கொள்ள மனைவி சம்​ம​திக்​க​வில்​லை என விவாகரத்து கோரி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் குமரன் வழக்கு தொடர்ந்​தார். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ விரும்​புவ​தாக தெரி​வித்த செல்​வி, “எனது பெற்​றோரை மருத்​துவ சிகிச்​சைக்​காக ஊரில் இருந்து அழைத்து வந்​தேன் என்ற ஒரே காரணத்​துக்​காக, கணவர் விவாகரத்து கோரு​கிறார். இதற்​கிடையே, தந்தை இறந்​து​விட்ட நிலை​யில், கணவர் தன்னை தனி​யாக விட்டு பிரிந்து சென்று விட்​டார்” என்று கூறி சென்னை முதலா​வது கூடு​தல் குடும்ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த குடும்ப நல நீதி​மன்​றம், ‘குமரனின் கூற்​றில் உண்மை இல்​லை’ என்று கூறி, விவாகரத்து வழங்க மறுத்​து, சேர்ந்து வாழ உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் குமரன் மேல்​முறை​யீடு செய்​தார். நீதிப​தி​கள் ஜெ,நிஷா​பானு, ஆர்​.சக்​திவேல் அமர்​வில் இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது.

நீதிப​தி​கள் கூறிய​தாவது: வயதான பெற்​றோரை இறுதி காலத்​தில் பராமரிக்​கும் பொறுப்​பும், கடமை​யும் மகன், மகள் ஆகிய இரு​வருக்​கும் உள்​ளது. ஒரு மகளாக அந்த பெண் தனது நோய் ​வாய்ப்​பட்ட தந்​தையை தனது வீட்​டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்​துள்​ளார். இதை கணவனுக்கு மனைவி இழைக்​கும் கொடுமை​யாகவோ, மன உளைச்​சலாகவோ கருத முடி​யாது. இரு​வரும் கடந்த 2020 ஏப்​ரல் வரை மகிழ்ச்​சி​யாக குடும்​பம் நடத்தி வந்த நிலை​யில், குழந்தை பெற மனைவி சம்​ம​திக்​க​வில்லை என்று கூறு​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

தனது தந்​தையை இழந்து தவித்த மனை​விக்கு ஆறு​தல் கூறு​வதற்​கு​கூட மனமில்​லாமல் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்​தது ஏற்​புடையது அல்ல. எனவே, விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்​ளு​படி செய்து சென்னை குடும்ப நல நீதி​மன்​றம் பிறப்​பித்​த உத்​தரவை நாங்​களும் உறுதி செய்​கிறோம். இவ்​வாறு உத்தரவிட்டு குமரனின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்​ளு​படி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x