Published : 08 Jun 2025 11:48 PM
Last Updated : 08 Jun 2025 11:48 PM
மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்காக அமித்ஷா நேற்று இரவில் மதுரை வந்தார். விமான நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் தங்கும் விடுதிக்கு திரும்பிய அவர் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 22 மாநில நிர்வாகிகள் அடங்கிய தமிழக பாஜக மையக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தாதது ஏன்? கட்சி நிர்வாகிகளிடம் சுணக்கம் காணப்படுவது ஏன்? என்பது குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா விவாதித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், கடந்த பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற பாஜக, தென் மாவட்டங்களில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2ம் இடம் வந்தது குறிப்பிடத்தக்கது. இதை நிர்வாகிகளிடம் குறிப்பிட்ட அமித்ஷா, இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தவும், அதிமுக கூட்டணியில் வரும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் தயார் செய்யவேண்டும், கூட்டணி கட்சிகளையோ அதன் தலைவர்களையோ எந்தவிதத்திலும் பாஜகவினர் விமர்சித்துப் பேசக்கூடாது. பல கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 2026 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் அறிவுறுத்தியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், மதுரையில் ஜூன் 22-ல் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜகவினர் திரளாக பங்கேற்கவும் அமித்ஷா கேட்டுக் கொண்டார். முன்னதாக இந்து முன்னணி நிர்வாகிகள் அமித்ஷாவை நேரில் சந்தித்து முருக பக்தர்கள் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT