Published : 08 Jun 2025 10:38 PM
Last Updated : 08 Jun 2025 10:38 PM

“2026-ல் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்” - மதுரை கூட்டத்தில் பாஜக தலைவர்கள் சூளுரை

மதுரை: தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சூளுரை செய்தனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “காஷ்மீரில் பிரதமர் மோடி மேற்கொண்டது ஆபரேசன் சிந்தூர் , அமித்ஷா மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி சிந்தூர் எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் சைலன்ட் ஆபரேசன் செய்யப்போகிறார். யார் ஷா எனக் கேட்கிறார் ஸ்டாலின். ஹரியானா, மகாராஷ்டிரா, டில்லியில் பாஜக ஆட்சியை கொண்டு வந்தவர் தான் இந்த ஷா. அவர் தான் எங்கள் அமித்ஷா. திமுக ஆட்சியை ஆளுனராக இருந்த கே.கே.ஷா கலைத்த திமுக தோல்வி பயத்திலும் உளறிக் கொண்டிருக்கிறது.

பாஜக அதிமுக கூட்டணி துரோக கூட்டணி என்கிறார்கள். இந்திராகாந்தி மதுரை வந்த போது அவர் மீது திமுகவினர் கல்வீசினர். இதில் அவரது தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. அதை கொச்சையாக பேசியது யார்? இப்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். அமித்ஷா இனிமேல் மாதம் தோறும் வரப்போகிறார். திமுக இல்லாமல் போகப்போகிறது. பொய்யில் கால்படி, புரட்டில் முக்கால்படி, மக்கள் நம்பும்படி வாழ்வது எப்படி? இது தான் திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவுடன் பாஜக பொருந்தும் கூட்டணி அமைந்துள்ளது. அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி நிச்சயம் அமைந்தே தீரும். திமுக ஆட்சி அகற்றப்படும் என்றார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இந்தியா சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த 11 ஆண்டுளில் சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுகவை வீட்டுக்கு ஓட ஓட விரட்டும் காலம் வந்துள்ளது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதனால் தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. வெற்றிவேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் மாநாடாக இருக்கும்” என்றார்.

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வளர்ந்து வருகிறது. மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு மாற்று பெயரில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை. மக்களின் பணங்களை கொள்ளையடிக்கும் தம்பிகள் உலவிக் கொண்டிருக்கும்போது மக்கள் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கும் வகையில் ‘சார்கள்’ தமிழகத்தில் உலவுகின்றனர். தமிழகத்தில் 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. 2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட வேண்டும்” என்றார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசுகையில், “அமித்ஷா தமிழகம் வந்தால் ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது. திமுக ஆட்சியை கலைத்தவர் ஆளுநர் கே.கே.ஷா என்பதை ஸ்டாலின் மனதில் கொள்ள வேண்டும். திமுக மதவாதம் பேசுகிறது. அவர்கள் மதவாதம் பேச பேச பாஜக மக்களுடன் இணைந்து வருகிறது. வரும் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் வெற்றி விழா நடைபெற மீனாட்சி அருள்புரிவார். அநீதிக்கு எதிராக கண்ணி போராடிய மதுரையில் திமுகவுக்கு முடிவுரை எழுத வேண்டும்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், “தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல், ஊறல், போதை ஆட்சி 9 மாதத்தில் ஆகற்றப்படும். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்து விரோத சக்தி ஆட்சி நடைபெறுகிறது. திமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா தான் இந்த மாநாடு” என்றார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு இதே காலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 2026ல் நடைபெறும் தேர்தல் நமக்கான தேர்தல். அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், “தமிழகத்தில் 2026-ல் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் கூட்டம் இது. தேசிய ஜனநாயக கூட்டணி நாளுக்கு நாள் வலம் பெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மீது அக்கறையுடன் உள்ளார். கடந்த முறை சென்னைக்கு வந்த போது கூட்டணியை இறுதி செய்து சென்றார். குறுகிய கால இடைவெளியில் மீண்டும் மதுரைக்கு வந்துள்ளார். வெற்றி இலக்கை அடைய வழிகாட்ட வந்துள்ளார். தமிழகத்தில் திமுக ஊழல், வாரிசு ஆட்சியை நடத்தி வருகிறது. பெண்களுக்கு எதிராக, பட்டியலின சமூகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

- கி.மகாராஜன்/ சுப.ஜனநாயக செல்வம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x