Published : 08 Jun 2025 06:27 PM
Last Updated : 08 Jun 2025 06:27 PM

கொடைக்கானலில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை முடிவு

கொடைக்கானல் குணாகுகை பகுதியில் வனத்துறையினர் இரும்பு தடுப்பு கம்பிகளுக்குள் நுழைந்து வீடியோ எடுத்த இளைஞர்.

திண்டுக்கல்: ஆபத்தை உணராமல் ரீல்ஸ்க்காக கொடைக்கானல் குணா குகை தடுப்பு கம்பிகளை கடந்து சென்று வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை, கடந்த ஆண்டு வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்திற்கு பிறகு மேலும் பிரபலமடையத் துவங்கியுள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடாத இடமாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. இதனால் மற்ற சுற்றுலாத்தலங்களை விட குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும். கடந்த இரண்டு மாதங்களில் கோடை விடுமுறையில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குணா குகை பகுதிக்கு வந்து சென்றுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஆழமான குகை பகுதிகளை எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இரும்பு கம்பிகள் வைத்து வனத்துறையினர் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை குணாகுகையில் தவறி விழுந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறாத வகையில் பல பாதுகாப்பு அம்சங்களை வனத்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். தடுப்பு கம்பிகளுக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், பள்ளதாக்கு பகுதியில் இருந்து மேகக்கூட்டங்கள் கீழிருந்து மேல் எழும் ரம்மியமான காட்சி தென்படும்.

இந்நிலையில் தற்போது குணா குகைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து தங்களை படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குணா குகையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் குணா குகை பகுதியில் வனத்துறையினர் தடுப்பு கம்பிகளுக்கு இடையே மெலிந்த உடலமைப்பு கொண்ட இளைஞர் ஒருவர் நுழைந்து ஆபத்தான பகுதிக்கு சென்று வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், ஒரு அடி தவறினாலே பல நூறு அடி ஆழத்தில் விழ நேரிடும் நிலையில் இளைஞரின் இந்த ஆபத்தான செயல் பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

இதுகுறித்து அறிந்த கொடைக்கானல் வனத்துறையினர் அந்த இளைஞரின் இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் அந்த இளைஞர் யார் என்ற விபரங்களை சேகரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x