Published : 08 Jun 2025 06:21 PM
Last Updated : 08 Jun 2025 06:21 PM
கொடைக்கானல்: முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் மத சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது. வக்பு திருத்தச் சட்டம் என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரானது தான். ஜனநாயகத்தை காப்பவர்களும் மதச்சார்பின்மையை காப்பவர்களும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும்.
மாநிலத்திற்கு மாநிலம் பாஜக ஒவ்வொரு வடிவத்தை எடுத்து வருகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ராமர் வடிவம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் துர்கா தேவி, மத்திய இந்தியாவில் விநாயகர் அவதாரம், தமிழ்நாட்டில் முருகன் அவதாரத்தை எடுத்துள்ளனர். பாஜக செய்யும் இந்த மாய்மால அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. முருகன் பெயரில் மாநாடு நடத்துவது இங்கு எடுபடாது. தமிழ் மக்களும் ஏமாற மாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார்.
வடமாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மேட்ச் பிக்சிங் போல் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியிருப்பது உண்மை. இவிஎம் வைத்து பிஜேபியின் சூதாட்டம் நடந்து வருகிறது. அனைவரும் இந்த எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்திற்கு எதிராக போராடும் நிலை உருவாக வேண்டும். பிஹார் போன்ற மாநிலங்களில் இவர்கள் இலகுவாக இந்த எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள் மூலம் மேட்ச் பிக்சிங் செய்யலாம். தமிழ்நாட்டில் இது எடுபடாது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை ஈர்க்கும் பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இவர்களுடைய எண்ணம் பலிக்காது. அதிமுகவின் தோள் மீது சவாரி செய்துகொண்டு தங்களுக்கு பலம் உள்ளது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறது பாஜக. 2026 தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து விடும்.'' இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT