Published : 08 Jun 2025 04:53 PM
Last Updated : 08 Jun 2025 04:53 PM
சென்னை: "முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது" என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றினைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள். முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது.
கடந்த வருடம் கடவுள் இல்லை, முருகன் இல்லை, விநாயகர் இல்லை என்று இந்து கடவுள், இந்து வழிபாடு மட்டும் இல்லை என்று போலி நாத்திகம் பேசும் திமுக, முத்தமிழ் முருகன் மாநாடு என்று தங்கள் புகழ்பாடியபோது அது அரசியல் மாநாடாகத் தெரியவில்லையா? முத்தமிழ் முருகன் மாநாடு என்று தலைப்பிட்டு முன் வரிசையில் முஸ்லீம்களை அமர வைத்து மாநாடு நடத்துவது எந்த வகையிலான மாநாடு என பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு விருது வழங்கி திமுக சிறப்பித்த போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகியோருக்கு அரசியலாகத் தெரியவில்லையா? அரசியலில் ஈடுபடாத சமூக இயக்கமான இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூச முற்படுவதேன்? தினமும் இந்துக்களின் வழிபாட்டை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போலி மதசார்பற்ற கட்சிகளின் கயமைத்தனத்தை உணர்ந்து, மாநாடு மூலம் இந்துக்கள் விழித்துக்கொள்வார்களே என்ற பயமும் பதற்றமும் இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக தலைவர்களின் கருத்துகள் மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் தின்று அக்கிரமம் செய்தபோதும், கந்த சஷ்டி கவசம் அவதூறு செய்யப்பட்ட போதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவினர் எங்கே போனார்கள்? இப்போது பக்தர்கள் மாநாடல்ல, அரசியல் மாநாடு என்று கருத்து சொல்பவர்கள் யாருக்கும் அப்போது இந்துக்களின் மன குமுறல் கேட்கவில்லையே ஏன்?
முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது. மேலும் இந்துக்களின் எழுச்சி அந்தக் கட்சிகளுக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதை அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகிறது என்பதை மக்களும், பக்தர்களும் உணர்ந்துள்ளார்கள்.
எனவே இதுபோன்று இந்துக்களை திசைத்திருப்பும் தீய சக்திகளுக்கு பாடம் புகட்ட இந்துக்கள் தன்னெழுச்சியாக மதுரை மாநாட்டுக்கு வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறோம். ஆகவே எதிர்வரும் ஜூன் 22, முருக பக்தர்கள் மாநாடு முருகனின் அருளால் மாபெரும் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT