Last Updated : 08 Jun, 2025 03:03 PM

4  

Published : 08 Jun 2025 03:03 PM
Last Updated : 08 Jun 2025 03:03 PM

''பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பதற்றமே அமித் ஷா அடிக்கடி தமிழகம் வர காரணம்'': சேகர்பாபு

சென்னை சூளை பகுதியில் உள்ள அகண்ட தண்டு மாரியம்ன் கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சென்னை: “பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டணியாக திமுக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பதற்றம் பாஜக கூட்டணிக்கு இருப்பதால்தான் மத்திய அளவில் முக்கிய பதவியில் இருக்கின்ற அமித்ஷா போன்றவர்கள் கூட தமிழகத்துக்கு அவ்வப்போது வருகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் சூளை பகுதியில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று (ஜூன் 8) நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பின்னர் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சிக்கு எவ்வித பதற்றமோ, பயமோ இல்லை. திராவிட மாடல் ஆட்சி நாயகன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்த கூட்டணி வலுவோடும் பொலிவோடும் தெளிவோடும் இருக்கின்றது. பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டணியாக இந்த கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பதற்றம் அவர்களிடத்தில் இருப்பதால்தான் மத்திய அளவில் முக்கிய பதவியில் இருக்கின்ற அமித் ஷா போன்றவர்கள் கூட தமிழகத்துக்கு அவ்வப்போது வருகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் முதல்வரை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தோடு இருக்கிறது என்பதற்கு அமித் ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டாகும். திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள முருகன் மாநாடு, அரசியல் கட்சி சார்ந்த ஒரு மாநாடு. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய மாநாடு தான் பக்தி மார்க்கமான மாநாடாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பணி ஒரு சவாலான பணி. ராஜகோபுரமே விரிசல் விட்டு இருக்கின்ற நிலை. அதை சரி செய்கின்ற பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இக்கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் 16 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில், இந்த ஆட்சி வந்த பிறகுதான் பக்தர்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வந்திருக்கின்றோம். திருக்கோயிலுக்கு ஓரிரு நாட்களில் நேரடியாக ஆய்வுக்கு செல்ல இருக்கின்றோம். அனைத்து திருப்பணிகளின் நிலையை ஆய்வு செய்த பிறகு குடமுழுக்கிற்கான தேதியை அறிவிப்போம். கடந்த கால எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த திறனற்ற ஆட்சிக்கு ஒரு திட்டத்தை சாட்சியாக வைக்க வேண்டுமென்றால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தான். திட்டமிடல் இல்லாததால் அந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வடிவமைத்ததன் காரணமாக அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே அதை செப்பனிட முடியவில்லை.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதில் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டால் காலமும் நேரமும் போதாது. கிளாம்பாக்கத்தில் மழை நீர் வடிகால்கள் கூட அமைக்கப்படவில்லை. கிளாம்பக்கத்துக்கும் அந்த ரயில் நிலையத்துக்கும் நடைபாதை கூட அமைக்கப்படவில்லை. கிளாம்பாக்கத்தில் இருந்து வழி மார்க்கங்கள் கூட அமைக்கப்படவில்லை. பூங்காக்களை மேம்படுத்தவில்லை. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் பூங்காவை உருவாக்கினோம் நீரூற்று பூங்காவை உருவாக்கினோம்.

இப்படி எந்த பணியும் திட்டமிடப்படாததால் அந்த பேருந்து நிலைய பணிகள் முடங்கி இருந்ததை சீர் செய்கின்ற நோக்கோடு தமிழக முதல்வரின் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சர்வதேச தரத்திற்கு இணையாக விமான நிலையங்களுக்கு இணையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடர் விடுமுறை காரணமாக இரவு நேரத்தில் பயணிகள் அதிகமாக கூடியதால் இரவு நேர பயணிகளுக்கு போதுமான பேருந்து இல்லாத நிலையில் அவர்கள் ஒரு தர்ணாவிலே ஈடுபட்ட சூழ்நிலை. அதையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன் தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து அந்தப் பயணிகளின் திட்டமிட்ட பயணத்தையும் நிறைவேற்றி இருக்கின்றோம்.

மேலும் இந்த ஆட்சியில் எந்த விதமான தவறும் இல்லை என்பதால் போக்குவரத்து துறை சார்பிலும் அரசின் சார்பிலும் அன்றைக்கு ஏற்பட்ட நிலையை விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றோம். பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து இந்த விடுமுறை நாட்களில் அதிக அளவு பயணிகள் பயணங்கள் மேற்கொண்ட போதிலும் போதுமான அளவுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் கூட 200 நபர்களுக்கு பேருந்து இல்லை என்ற நிலையில் தான் இந்த பிரச்சினை நடந்தது.

ஒரு மணி நேரத்திற்குள்ளாக அதையும் சரி செய்து அவர்களுடைய பயணத்தையும் இனிதாக்கிய அரசு இந்த அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடசென்னை தென்சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இருக்கிறது என்பதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இப்படிப்பட்ட சிறிய பிரச்சினையை கூட பெரிதாக்க முயற்சிக்கின்றார்கள், என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x