Published : 08 Jun 2025 01:33 PM
Last Updated : 08 Jun 2025 01:33 PM

மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த அமித் ஷா - கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை ஒத்தக்கடையில் இன்று (ஜூன் 8) நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை இரவு புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு 10.30 மணிக்கு வருகை தந்தார். அங்கிருந்து சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய காலை 11.52 மணிக்கு வருகை தந்தார். கிழக்கு கோபுர வாசல் அருகில் உள்ள அம்மன் சன்னதி வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலில் வந்திறங்கிய அமித் ஷாவை மதுரை ஆதீனம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற உச்சிகால பூஜையில் அமித் ஷா கலந்து கொண்டார். உள்துறை அமைச்சர் வருகையால் ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்தே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

பகல் 12 மணிக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சிந்தாமணியில் உள்ள விடுதிக்குச் சென்ற உள்துறை அமைச்சர், பாஜக மையக் குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்குப் பின் ஒத்தக்கடையில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x