Published : 08 Jun 2025 01:24 PM
Last Updated : 08 Jun 2025 01:24 PM
மதுரை: மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
மதுரையில் இன்று (ஜூன் 8) மாலை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து அமித்ஷா சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது. இதையடுத்து அமித்ஷாவை வரவேற்க தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இவர்களுடன் அமித்ஷாவை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் விமான நிலையம் வந்தனர். இந்நிலையில் அமித்ஷா வருகையில் தாமதம் ஏற்பட்டது. ஒத்தக்கடையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த இடம் மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகே அமித்ஷா டெல்லியிலிருந்து புறப்படுவதாக இருந்தது. பின்னர் மேடை அமைப்பு பணி முடிந்து மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா டெல்லியிலிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
இதையடுத்து 3 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு இரவு 10.25 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார் அமித்ஷா. விமான நிலையத்தில் அமித்ஷாவை அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில துணைத் தலைவர் ராஜ ரத்தினம், மதுரை மாவட்ட பாஜக தலைவர்கள் மாரிச்சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளை அமித்ஷாவிடம் அறிமுகப்படுத்தினார். பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அமித்ஷாவை வரவேற்றனர். பின்னர் அமித்ஷா விமான நிலையம் அருகே தங்கும் விடுதிக்கு சென்றார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டம்: பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஒத்தக்கடையில் வேலம்மாள் மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. கோட்டை வடிவிலான நுழைவாயில், அமித்ஷா புகைப்படம், பாரதமாதா புகைப்படம், தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது. 15 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்தக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, சட்டமன்ற தேர்தல் தொகுதிகள் வெற்றி விவரம், வியூகம் அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு அமித்ஷா ஆலோசனை கூறுகிறார்.
அமித்ஷா வருகையால் மதுரையில் அவர் தங்கும் விடுதியில் இருந்து ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி மேடை வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெற்ற ஒரு வாரத்தில் அமித்ஷாவை அழைத்து நிர்வாகிகள் கூட்டத்தை பாஜக நடத்துவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT