Published : 07 Jun 2025 04:22 AM
Last Updated : 07 Jun 2025 04:22 AM
சென்னை: தமிழகத்தில் இணைநோய் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுவர்கள் விரைவில் குணமடைகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம், மகாராஷ்டிராவில் 17, கேரளாவில் 11, டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 7 பேர், தமிழகத்தில் 4 பேர் என மொத்தம் 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் கரோனாவால் இறந்த 4 பேரும் இணை நோய்கள் பாதிப்புள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் என்பதால், கரோனா இறப்பாகக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் அச்சப்படும் வகையில் கரோனா தொற்று பாதிப்பு இல்லை. அதேநேரம், கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.
தமிழகத்தில் இறந்த 4 பேரும் தீவிர இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள். அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், இறப்புக்கான பிரதான காரணம் கரோனா இல்லை. கரோனாவால் பாதிக்கப்படும் 99 சதவீதம் பேர் எவ்வித தீவிர பாதிப்பும் இல்லாமல் குணமடைந்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களின் இறப்பை, கரோனா இறப்பில் சேர்ப்பதில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT